தமிழகத்தில் இன்று
சென்னை:
நடிகை ரோஜாவுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள விருதை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை வசூலித்துத் தர வேண்டும் என்று அவருக்குக் கடன்கொடுத்த முகுந்த் சந்த் போத்ரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
1995 ம் ஆண்டு நடிகை ரோஜாவும், அவரது தம்பியும் திரைப்படம் எடுப்பதற்காக முகுந்த்சந்த் போத்ரா என்பவரிடம் ரூ 20 லட்சம் கடனாகவாங்கினர்.
ஆனால் இவர்கள் படம் எடுக்காததால் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்குமாறு முகுந்த் சந்த் கேட்டார். அப்போது ரோஜா அவருக்கு 6 லட்சரூபாய் கொடுத்து விட்டு மீதிப்பணத்திற்கு செக் கொடுத்தார். அந்தச் செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.
இந்நிலையில் போத்ரா கடன்தொகையை வசூல் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரோஜாவின்சம்பளத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும்படி ரோஜாவை வைத்துப் படம் எடுக்கும் படஅதிபர்களுக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, பட அதிபர்கள் ரோஜாவின் சம்பளத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தனர். அப்படியும் முகுந்த் சந்த் போத்ராவுக்குக் கிடைக்கவேண்டிய முழு பணமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு ரோஜாவை சிறந்த நடிகையாகத் தேர்வு செய்து விருது வழங்கவுள்ளது. இந்த விருது 40 கிராம் எடையுள்ள தங்க மெடலாகும்.
எனவே அந்த விருதை ஏலம் விட்டு கடன்தொகையை நீதிமன்றம் வசூலித்துத் தர வேண்டும் என்று மீண்டும் ரோஜாவுக்கு எதிராக வழக்குத்தொடர்ந்துள்ளார் போத்ரா.