தமிழகத்தில் இன்று
பெண் பிரதமர் கேட்கிறார்கள் பிஜி புரட்சியாளர்கள்
சுவா:
பிஜியில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாண பிஜி நாட்டைச் சேர்ந்த பெண் தலைவரைப் பிரதமராக நியமிக்கவேண்டும் என்றுபுரட்சிப் படையினர் கோரியுள்ளனர்.
பிஜி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் கடந்த மே மாதம் 19-ம் தேதி பிஜியில் புரட்சி வெடித்தது.
நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த புரட்சிப்படையினர் இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட பலரைச் சிறைப்பிடித்தனர்.
அதன்பிறகு, பிஜியில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. ராணுவத்தின் கையில் ஆட்சி வந்தது.
பிஜியில் பிஜி நாட்டவர்களைக் கொண்டு புதிய இடைக்கால அரசு ஏற்படுத்தவேண்டும் என்றும் தாங்கள் ஆதரிக்கும் முன்னாள் அதிபர் இலாய்லோவைமீண்டும் அதிபராக நியமிக்கவேண்டும் என்றும் புரட்சிப் படையினர் கோரிக்கை விடுத்தனர்.
இக் கோரிக்கையை ராணுவம் ஏற்றுக் கொண்டு இலாய்லோவை புதிய அதிபராக நியமித்தது. அவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொள்ள விருந்தது.
ஆனால், தான் குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட மிகக் குறைந்த அளவிலேயே அமைச்சரவையில் தனது ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டதை அடுத்துஅமைச்சரவை பதவியேற்புக்கு ஜார்ஜ் ஸ்பீட் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனால், புதிய அமைச்சரவை இன்னும் பதவியேற்றுக் கொள்ளவில்லை. இந் நிலையில், புரட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மகேந்திர சவுத்ரி,இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் விடி லேவு தீவில் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, பிஜியில் கடந்த 9 வாரங்களாக நீடித்து வரும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண பிஜி நாட்டைச் சேர்ந்த பெண் தலைவர் அடி சமானுனுககோபாவ் என்பவரை புதிய பிரதமராக நியமிக்கவேண்டும் என்று புரட்சிப் படையினர் கோரியுள்ளனர்.
பிஜி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கவும், நாட்டில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்தவும் தகுதியும், திறமையும் உள்ளவரும்,அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியவருமான ஒருவர் பிஜியின் பிரதமராகவேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என்று புரட்சிப் படைசெய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மலேசியாவுக்கான பிஜியின் முன்னாள் தூதராகப் பதவிவகித்துள்ளார் ககோபாவ். இவரது தாத்தா ராது செரு ககோபாவ், ஆங்கிலேயர் ஆதிக்கத்தைஎதிர்த்து 1874-ல் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிஜி வரலாற்றுடன் ககோபாவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த புரட்சிப் படையினர், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் மீண்டும்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துள்ளனர். இந் நிலையில் அவர்கள் தங்களது புதிய கோரிக்கையை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிபர் இலாய்லோவுடன் ஜார்ஜ் ஸ்பீட் சனிக்கிழமை பேச்சு நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய நிலை காரணமாக பிஜி நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகள் பொருளாதாரத்தடைகளை விதித்துள்ளன.
ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது தூதரை விலக்கிக் கொண்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.