இந்த வாரம்
வதந்திகளை நம்பாதீர்...போலீஸ் கோரிக்கை
பெங்களூர்:
பெங்களூர் நகரில் வன்முறை மூண்டதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று போலீஸ் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் ராஜ்குமார், கடத்தப்பட்டதையடுத்து பெங்களூர் நகரில் வன்முறை மூண்டது. இரண்டு நாட்களாக வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்த பெங்களூரில்,புதன்கிழமை காலை சகஜ நிலை தொடங்கியது. நகரப் பேருந்துகள் வழக்கம்போல் ஓடத் தொடங்கின. இது நெடு நேரம் நீடிக்கவில்லை.
ஜே.சி.ரோடு, காந்திநகர் பகுதிகளில் கலவரம் ஏற்பட்டதாக புரளி கிளம்பியதையடுத்து அங்கு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிற்பகல் முதல்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
பெங்களூர் நகர போலீஸார் இதுகுறித்துக் கூறுகையில், நகரில் அமைதி திரும்பி வரும் இந்நிலையில் சில பகுதிகளில் பஸ்களுக்குக் கல்வீச்சு போன்ற வன்முறைச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் வதந்திகள் குறித்து கவலைப்பட வேண்டாம்.
இரண்டு நாட்களாக தனியார் மற்றும் அரசு வங்கிகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. புதன்கிழமை காலை முதல் வங்கிகள் அனைத்தும் இயங்கின.
நகரின் எந்தப் பகுதியிலும் அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்படாதவாறு மத்திய புறக்காவல் படை வீரர்கள் 300 பேர், மத்திய தொழில் பாதுகாப்புப் படைவீரர்கள் 100 பேர் மற்றும் நகர போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் கலவரம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ்நிலையத்திற்கோ அல்லது போலீஸ் கன்ட்ரோல் அறைக்கோ தகவல் கொடுக்கலாம் என்றனர்.
சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் எம்.டி.சிங் கூறுகையில், நகரில் சகஜ நிலை திரும்புகிறது. பெங்களூரிலிருந்து வேறு மாநிலங்களுக்குச்செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
பெரியப்பட்டினா, ஹாசன் டவுன், பேலூர், குடகு மாவட்டத்தில் சோமவார்பேட் பகுதிகளில் பந்த் நடந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பேருந்துகள் ஓடாததால் சாலைகள் பாலைவனம் போல் வெறிச்சோடிக் காட்சியளித்தன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடைகள்எதுவும் திறக்கப்படவில்லை என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications