கேட்டதும் கிடைக்கும் "பவர்
சென்னை:
சென்னை நகரில் விண்ணப்பித்த ஒரே வாரத்தில் மின் இணைப்புக் கொடுக்கப்படும் என்று தமிழக மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.
மின் விநியோகத்தை சீர்படுத்துவது, நுகர்வோர் திருப்தி குறித்து சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
மின் கட்டண வசூலில் இந்தியாவிலேயே தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மின் தடையைக் குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக, பல இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சுமார் ரூ. 1,500 கோடி செலவில் 240 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 66 துணை மின் நிலையங்கள் அமைக்கதிட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் இன்னும் சீரான மின் விநயோகம் இல்லை என்று புகார்கள் வருகின்றன. இதைத் தீர்க்க தக்கநடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்ட 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கவேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மதுரை, கோவையில் இம்முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 30 நாட்களில் மின் இணைப்பு கொடுக்கும் முறை அமலில் உள்ளது. விரைவில் இதை ஒரு வாரமாகக் குறைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே மின் இணைப்பு கேட்டு அதிகம் பேர் காத்திருப்பது சென்னையில்தான். ஆகவே, மின் வாரியப் பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்திவிரைவில் மின் இணைப்பு கொடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
தொழிற்சாலைகள் மூலம்தான் தமிழக அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. வருமானத்தை மேலும் அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்கவேண்டும். மின் தடை இல்லாமல் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் ஆர்க்காடு வீராசாமி.