நாகாலாந்தில் பட்டப்பகலில் ரூ. 23 லட்சம் கொள்ளை
கொஹிமா:
நாகாலாந்து மாநிலத்தில் திமாபூர் நகரில் பட்டப்பகலில் ரூ. 23 லட்சத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
வெள்ளிக்கிழமை நடந்த இச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:
நாகாலாந்து தலைநகர் கொஹிமாவிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திமாபூர்.
இங்குள்ள பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியிலிருந்து இந்திய ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக ரூ. 23 லட்சத்தை எடுத்துக் கொண்டு வங்கியின் இரு பாதுகாப்புஊழியர்கள் ஆட்டோவில் சென்றனர். பாதுகாப்புக்கு துப்பாக்கிகளை உடன் எடுத்துச் சென்றனர்.
வழியில் ஆட்டோவை முகமூடி அணிந்திருந்த 3 பேர் வழி மறித்தனர். அவர்கள் கையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கி இருந்தது.
பாதுகாப்பு ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஆட்டோவில் இருந்த ரூ. 23 லட்சத்தையும், ஒரு பாதுகாப்பு ஊழியரிடமிருந்த துப்பாக்கியையும்அவர்கள் பறித்துக் கொண்டனர்.
அப்போது மற்றொரு பாதுகாப்பு ஊழியர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் கொள்ளையர்களை நோக்கிச் சுட்டார். இதில் ஒரு கொள்ளையனுக்குக்காயமேற்பட்டது.
இருப்பினும் பணத்துடனும், ஒரு துப்பாக்கியுடனும் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இச் சம்பவத்தை அடுத்து திமாபூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் பற்றி துப்பாக்கியையும் பணத்தையும் பறிகொடுத்த வங்கியின் பாதுகாப்பு ஊழியர்களிடம் போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.