மாநிலங்களுக்கு சிறப்பு நிதி - முதல்வர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்
டெல்லி:
11-வது நிதிக் கமிஷன் பரிந்துரையால் நிதி இழப்புக்குள்ளான மாநிலங்களுக்கு சிறப்பு நிதி மூலமாக மத்திய அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றுஆந்திர முதல்வர் சந்திரபாபு தலைமையில் நடந்த முதல் அமைச்சர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசிடம் 11-வது நிதிக் கமிஷன் தனது பரிந்துரை அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்தது. அதில் மத்திய அரசின் வரி வருவாயில் அதிகபட்சம் 37.5சதவீத தொகையை மட்டும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியைக் குறைத்து பின் தங்கியமாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
நிதிக் கமிஷனின் இந்தப் பரிந்துரையால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் உள்பட 17 மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்துவிடும்என்பதால் அந்த மாநிலங்கள் கவலை அடைந்துள்ளன.
இதையடுத்து டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கேரள முதல்வர் ஈ.கே.நாயனார், அரியானா முதல்வர் சவுதாலா, பஞ்சாப் முதல்வர் பாதல், அசாம் முதல்வர் மெகந்தா, மணிப்பூர் முதல்வர்நிபமச்சாங் உள்பட 6 முதல்வர்களும், மராட்டிய மாநில துணை முதல்வர் புஜ்பாலும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து முதல்வர் கருணாநிதியின் பிரதிநிதியாக சட்ட அமைச்சர் ஆலடி அருணா கலந்து கொண்டார். குஜராத், ஒரிசா உள்பட மீதி 9 மாநிலமுதல்வர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் அவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இம் மாநாட்டில் நிதிக்கமிஷன் பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
11-வது நிதிக்கமிஷன் பரிந்துரையால் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். அந்த மாநிலங்களால் மேம்பாட்டுத் திட்டங்களைநிறைவேற்ற முடியாது.
நிதி ஒதுக்கீடு செய்யும் போது திறமை, நியாயம் ஆகிய அம்சங்களைப் பின்பற்ற வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சில முன்னுரிமைகொடுக்காவிட்டால் நிதி நிலவரம் சீர்குலைந்து விடும். பின்தங்கிய மாநிலங்களுக்கு வளர்ச்சியடைந்த மாநிலங்கள் ஒருபோதும் எதிரி அல்ல.
நிதிக்கமிஷன் பரிந்துரையால் வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்பைச் சரிகட்ட மத்திய அரசு நஷ்டஈடு தர வேண்டும். பரிந்துரைகளைஅமல்படுத்தும்முன்பு தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் இழப்புக்களைச் சரிகட்ட சிறப்பு நிதியை உருவாக்க வேண்டும்.
நிதிக்கமிஷன் கூறியுள்ள அதிகபட்ச ஒதுக்கீடு 37.5 சதவீதம் என்பதை குறைந்தபட்ச ஒதுக்கீடாக நிர்ணயிக்க வேண்டும். மத்திய அரசு வசூலிக்கும் கூடுதல்வரியில் மாநில அரசுகளுக்குப் போதிய அதிகாரம் தர வேண்டும்.
பிரதமர், நிதி அமைச்சர், திட்டக் கமிஷன், மத்தியஅரசு ஆகியவை பொருளாதார சீர்திருத்தம் பற்றி நிறைய பேசுகிறார்கள். ஆனால் நிதிக் கமிஷனின்பரிந்துரை அதற்கு நேர்மாறாக உள்ளது என்றார் அவர்.
கூட்டத்துக்கு பிறகு முதலமைச்சர்கள் அனைவரும் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்து அவற்றைநிறைவேற்றும்படி கூறினர்.