ராஜ்குமாருடன்தான் வருவேன் ...கோபால்
சென்னை:
மூன்றாவது முறையாக வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் செல்லும் நான், ராஜ்குமாருடன்தான் திரும்பி வருவேன் என்று நக்கீரன் கோபால்கூறினார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை ஜூலை 30-ம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றான். அவர்களை விடுவிக்க வீரப்பன் 10கோரிக்கைகளை அறிவித்தான். அவற்றில் சிலவற்றை ஏற்றுக் கொண்டும் சிலவற்றுக்கு விளக்கங்களையும் தமிழக மற்றும் கர்நாடக அரசுகள்அறிவித்தன.
முதன்முறையாக அரசுத் தூதராக காட்டுக்குள் சென்ற நக்கீரன் கோபால் மேலும் 4 கோரிக்கைகளுடன் திரும்பினார்.
அக் கோரிக்கைகளுக்கான இரு மாநில அரசுகளின் பதில்களுடன் இரண்டாவது முறையாக காட்டுக்குள் சென்றார் நக்கீரன் கோபால். ஆனால் பலதடைகளுக்குப் பிறகே வீரப்பனை நக்கீரன் கோபாலால் சந்திக்க முடிந்தது.ஆனால் ராஜ்குமாரை விடுவிப்பதில் முழு வெற்றி கிடைக்கவில்லைஎன்றாலும், கோரிக்கைகள் குறித்து வீரப்பன் கேட்ட சில விளக்கங்களுடன் நக்கீரன் கோபால் திரும்பினார்.
இப்போது இரு மாநில அரசுகளின் முழு விளக்கங்களுடன் வீரப்பனைச் சந்திக்க திங்கள்கிழமை இரவு 3-வது முறையாக காட்டுக்குள் செல்கிறார்நக்கீரன் கோபால்.
இந்த முறை நிச்சயம் ராஜ்குமாரை வெற்றிகரமாக மீட்டு வருவேன் என்று நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
இது தொடர்பாக கர்நாடக மாநில ரேடியோவில் அவர் பேசியதாவது:
வீரப்பன் பிடியில் உள்ள ராஜ்குமார் உடல் நலத்துடனும், ஆரோக்கத்துடனும் இருக்கிறார். ராஜ்குமாரும் கடத்தப்பட்ட மற்றவர்களும் ஒரேகூடாரத்தில்தான் தங்க வைக்கப்படுகின்றனர்.
கூடாரத்துக்கு வெளியே வீரப்பனின் ஆள் காவல் காக்கிறார். இரண்டாவது முறை நான் சென்றபோது ராஜ்குமாரைச் சந்திக்க விடாமல் தடுத்தனர்.ஆனால், எனது வற்புறுத்தலின்பேரில் பின்னர் அனுமதித்தனர்.
வீரப்பன் தினமும் ரேடியோவில் ஒலிபரப்பாகும் 13 நிலையச் செய்திகளைக் கேட்கிறான். சென்னை, பெங்களூர், பி.பி.சி. போன்ற அலைவரிசைகளில்ஒலிபரப்பாகும் செய்திகளைக் கேட்க அவன் தவறுவதில்லை.
ராஜ்குமாருக்கும் ஒரு ரேடியோ கொடுக்கப்பட்டுள்ளது. ரேடியோவில் தனது மனைவியும், குடும்பத்தினரும் பேசியதைக் கேட்டு சந்தோஷம்அடைந்தாக ராஜ்குமார் கூறினார்.
என்னுடைய தூதுப் பணிக்கு ரேடியோ உதவியாக உள்ளது. மூன்றாவது முறையாக காட்டுக்குள் செல்லும் நான் எல்லோருடைய ஆசீர்வாதத்துடன்ராஜ்குமாரை மீட்டு வருவேன் என்றார் கோபால்.