லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்படுமா?
வாஷிங்டன்:
வாஷிங்டனில் பிரதமர் வாஜ்பாய் வருகையின் போது, காஷ்மீரின் லஸ்கார் இ தொய்பா அமைப்பை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மான்டலின்ஆல்பிரைட், தீவிரவாத அமைப்பாக அறிவிப்பார் என்று தெரிகிறது.
இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டால் அது இந்தியாவுக்குக் கிடைக்கும் பரிசாகும். பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான இந்தஅமைப்பிற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத் துறை ஆதரவு தந்து வருகிறது.
லஸ்கர் அமைப்பைத் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக, அமெரிக்க வெளியுறவுத்துறையின் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு, சட்டப் பிரிவு, நீதிப் பிரிவு ஆகியவை ஆலோசனை நடத்தி வந்தன.
ஏற்கனவே, விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் போர்நிறுத்தம் அறிவித்தது. ஆனால் இதை லஸ்கர் அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹிஸ்புல் முடிவு செய்திருந்த நேரத்தில், காஷ்மீரில் கார் குண்டுவெடிப்பு, அமர்நாத் யாத்ரீகர்கள் 100பேரைக் கொன்றது உள்பட படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்டது. இந்த நிலையில், ஹிஸ்புல் அமைப்பு தனது சண்டை நிறுத்தத்தை, ஆகஸ்ட் 8 ம் தேதி வாபஸ்பெற்றுக் கொண்டது.
முன்னதாக, கடந்த வாரம் பிரதமர் வாஜ்பாயின் முதன்மை செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா தனியார் டி.விக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் தீவிரவாதத்தை தூண்டிவிடும் நாடாகும். லஸ்கர் இ தொய்பா அமைப்பைத் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்துஎல்லா கோணங்களிலும் ஆராய்ந்த பிறகு அதை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக்கூடும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.