மதுரைக்கு ராணுவத்தை அனுப்பக் கோருகிறார் சுவாமி
மதுரை:
மதுரையில் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி கும்பலால் வன்முறை கட்டுக்கடங்காமல் இருப்பதால் அங்கு உடனடியாக ராணுவத்தை அனுப்ப வேண்டும்என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரையில் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி விவகாரத்தில் பல அரசு பஸ்கள் தீவைத்துக்கொளுத்தப்பட்டுள்ளன. உடனடியாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அங்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்.
கலவரக் கும்பல்களைக் கட்டுப்படுத்த இயலாமல் திமுக அரசு உள்ளது. எனவே உடனடியாக எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ்போலீஸ் படையினரை இந்த மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும். வரும் சட்டசபைத் தேர்தல் முடியும் வரை இவர்கள் இங்கு இருக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் கலவரம் என்கிறபோது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் துடிக்கிற மத்திய அரசு, தமிழகத்திலும் அதே வேகத்தைக்காட்ட வேண்டும்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில், 51 தடா கைதிகளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் விதித்த தடை சரியானதே. அதிரடிப்படை வீரர்களைஅனுப்பி வீரப்பனை பிடிக்க வேண்டும்.
பாபர் மசூதி இடிப்பு, ராஜ்ய சபா உறுப்பினராவதற்காக தேர்தல் ஆணையத்திற்குத் தவறான தகவல் கொடுத்தது, அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததுதொடர்பான வழக்குகள் அத்வானி மீது உள்ளன.
உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு இந்த வழக்குகளை எதிர் கொண்டு வரும் அத்வானி பதவியில் நீடிக்க தார்மீக உரிமை கிடையாது. அத்வானிசட்டம், ஒழுங்கைக் காப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.