பிரியாணி பொட்டல அரசியல்: சுவாமி கிண்டல்
மதுரை:
அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி, மூப்பனார் மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார்.
மதுரை அருகேயுள்ள ஊமச்சிக்குளத்தில் ஜனதா கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிபேசியதாவது:
தமிழகத்திற்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஊழல்வாதிகளையும், தகுதி இல்லாதவர்களையும் மக்கள் புறக்கணிக்கவேண்டும். அரசியலைச் சுத்தமாக்கும் சக்தி மக்களாகிய உங்களுக்குத்தான் இருக்கிறது.
இந்தத் தேர்தலில் ஜனதாக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் ஜனதா கட்சி வேட்பாளர்களை நிறுத்துவேன்.
இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் மக்கள் வரிப்பணத்தை சுரண்டி கோடி, கோடியாக சம்பாதித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அவர்கள் மக்களுக்கு நோட்டு கொடுத்து ஓட்டு வாங்குவார்கள். பிரியாணி பொட்டலங்கள் வாங்கிக் கொடுத்து பெரும் கூட்டம் சேர்ப்பார்கள்.
ஆனால், என்னால் அதிக அளவு செலவு செய்ய முடியாது. ஊழல் மூலம் சேர்த்த பணம் என்னிடம் கிடையாது. ஓட்டுக்காக லட்டுக்குள் மூக்குத்தியைமறைத்து வைத்துக் கொடுக்க என்னால் முடியாது.
அதிமுக கூட்டணியில் நான் இருந்தபோது ஜெயலலிதாவை நம்பாதே என்று மூப்பனார் கூறினார். நான் விலகி விட்டேன். மூப்பனார் சேர்ந்து விட்டார்.
கூட்டணி ஆட்சிக்கு ஜெயலலிதா ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். மூப்பனார் தன்மானத்தோடு கடமையாற்ற வேண்டுமானால் அதிமுககூட்டணியை விட்டு வெளியேறி மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்றார் சுப்ரமணியம் சுவாமி.