கர்நாடகத்தில் முழுமையான பந்த்
பெங்களூர்:
கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) பந்த் நடந்து வருகிறது.
காலை வரை அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. குறிப்பாக பெங்களூரில் தமிழர்கள் நிறைந்த பகுதிகளிலும் அமைதிநிலவுகிறது.
நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரின் அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.மாநில அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பான்மையான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
சாலைகளிலும் போக்குவரத்தே இல்லை. மாநில அரசின் பஸ்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன. அதிலும்கூட பயணிகள் இல்லை, காலியாகவே அவை ஓடுகின்றன.
கல்வி நிலையங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதுவரை அமைதியாகவே பந்த் நடந்து வருகிறது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகதத்தின் பஸ்கள் கர்நாடகத்துக்குள் வரவில்லை. அவை ஒசூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.கர்நாடகம் வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகளும் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி இந்த பந்த் நடக்கிறது.
இதற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த பந்துக்கு ராஜ்குமார் குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெங்களூர்தமிழ்ச் சங்கமும் கூட ஆதரவு தெரிவித்துள்ளது.