போராட்டம் நடத்திய 10 மாஜி மந்திரிகள் கைது
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியமுன்னாள் அதிமுக அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்கு தனிக்கோர்ட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திங்கள்கிழமை இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்ட உடன் ஜெயலலிதா நேராக போயஸ் தோட்டத்திற்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகளும் சென்றனர்.
அவர்களுடன் ஜெயலலிதா ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு தலைவர்கள் கலைந்து சென்றனர்.
சென்னை அண்ணாசாலை, எல்.ஐ.சி. கட்டிடம் அருகே பிற்பகலில் காளிமுத்து, செங்கோட்டையன், மதுசூதனன், சத்தியமூர்த்தி,ஆனந்தன் ஆகியோர் மறியல் செய்தனர். இந்த மறியலில் முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், முன்னாள் வாரியத் தலைவர்பா.வளர்மதி, என்.ஆர்.சிவபதி, பி.கே.சேகர்பாபு, தென்றல் குமார் ஆகியோரும் ஈடுபட்டு கைதானார்கள்.
வேப்பேரி போக்குவரத்துக்கழக போலீஸ் துணை கமிஷ்னர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி,அரங்கநாயகம், எம்.பி. தளவாய் சுந்தரம், பூங்காநகர் ஜெ.குமார், தி.நகர் பொன்னுரங்கம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டுகைதானார்கள்.
முன்னாள் மாவட்டச் செயலாளர்களான ஆதிராஜாராம், பாலகங்கா, வ.கோதண்டராமன், வீடியோ சரவணன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 10 பேர் முன்னாள் அ.தி.மு.கஅமைச்சர்கள்.