ராஜ்குமார் இன்னும் விடுதலையாகவில்லை: கர்நாடக அரசு திட்டவட்ட அறிவிப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக போலீஸ்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,
ராஜ்குமாரையோ அவருடன் உள்ள 2 பேரையோ இதுவரை வீரப்பன் விடுவிக்கவில்லை. ஆனால், நக்கீரன் கோபால்,நெடுமாறன் உள்ளிட்ட தூதுக் குழுவினர் வீரப்பன் மற்றும் மாறன் உள்ளிட்ட தமிழ் தீவிரவாதிகளுடன் தொடர்ந்து பேச்சுநடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை மிக நல்ல கட்டத்தை அடைந்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றியடைந்து வருகிறது. எந்த நேரமும் நல்லமுடிவு ஏற்படும். ஆனால், எப்போது விடுவிக்கப்படுவார் என்று நேரம் எல்லாம் குறிப்பிட முடியாது.
ராஜ்குமாரை அழைத்து வர காட்டுப் பகுதிக்கு கர்நாடகத்தில் இருந்து எந்த வாகனமும் அனுப்பப்படவில்லை.
தமிழக அரசிடம் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே கர்நாடகம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்றார்கார்கே.
இந்தப் பேட்டி மூலம் நேற்று முதல் நிலவி வந்த புரளிகளுக்கும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்களுக்கும் ஒரு முடிவுவந்துள்ளது.