தங்கம் வென்ற தங்கங்கள்
விளம்பரங்கள் மூலமாகவும், பா.ஜ.க. அரசின் ஒரு வருட சாதனை விளக்கப்பட்டு வருகிறது. இந்த சாதனை விளக்கங்களில் உண்மையும், மிகைப்படுத்துதலும்கலந்தே இருக்கிறது.
அமெரிக்காவுடனான உறவு மிகவும் சீர்படுத்தப்பட்டிருக்கிறது என்பது அரசு தரப்பில் எடுத்துக் காட்டப்படுகிறது. இது உண்மையே. ஆனால்,அமெரிக்காவிற்கு இன்றுள்ள நிர்பந்தங்களும், நமது உறவுமுறை சீரமைந்ததற்கு ஒரு காரணம் என்பதை மறக்க முடியாது. இருந்தாலும் கூட, சூழ்நிலையைநன்றாகப் பயன்படுத்திக் கொண்டதற்காக, வாஜ்பாய் அரசு திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
காஷ்மீரைப் பற்றிய நமது நிலையை உலக நாடுகள் கிட்டத்தட்ட ஏற்று விட்டன என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது. இதுவும் உண்மையே. ஆனால்இதிலும் ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது. காஷ்மீரில் நமக்கு உள்ள பிரச்னையாகிய தீவிரவாதம் அமெரிக்காவும், ரஷ்யாவுக்கும் கூடபிரச்சினையாகி வருகிறது.
இந்த தீவிரவாத மிரட்டல்களுக்கெல்லாம் ஊற்று ஒன்றேதான் - ஆப்கானிஸ்தானின் தாலிபான் மற்றும் பாகிஸ்தான், தவிர ஓஸாமா பின் லேடன்.இந்த முக்கோணம் இன்று ரஷ்யாவையும், அமெரிக்காவையும் கூட அச்சுறுத்துகிறது. காஷ்மீரில் நமது நிலையை மற்ற நாடுகள் புரிந்து கொள்வதற்குஇதுவும் ஒரு காரணம்.
அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய கமிஷன் நிறுவப்பட்டிருப்பதும், மூன்று புது மாநிலங்கள் உருவாக்கப்பட்டிருப்பதும் சாதனையாக எடுத்துக்கூறப்படுகின்றன. ஆனால் இவற்றின் விளைவுகள் பொறுத்திருந்து பார்க்க வேண்டியவை. இரண்டுமே புதுப் பிரச்சினைகளை கிளப்பக் கூடிய விஷயங்கள்.
தேசிய நெடுஞ்சாலைகள் விஷயம், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் வசதிக்கான திட்டம், கிராமப்புறங்களில் சாலைகள் அமைப்புபோன்றவை என்ன வேகத்தில் எந்த அளவுக்கு நிறைவேற்றப்படுகின்றன என்பது அவை முடிகிறபோதுதான் தெரியும்.
பொருளாதாரத்தை தாராளமயமாக்குவதில் அரசு நல்ல முனைப்பைக் காட்டி வந்திருக்கிறது. பலவித பொருளாதார கருத்துக்களைக் கொண்ட கட்சிகளின்ஆதரவோடு இயங்குகிற வாஜ்பாயின் அரசு, பொருளாதார சீர்திருத்தத்தை நோக்கி தொடர்ந்து நடத்தி வரும் பயணம் பாரட்டத் தக்கதுதான்.
ஆனால் தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் ஆகியவை நம்பிக்கையைத் தருகின்றன என்றால், உலகமயமாக்குதல் கொஞ்சம்கவலையைத் தருகின்ற விஷயம். பொருளாதாரத்தை உலகமயமாக்கும்போது காட்டப்பட வேண்டிய எச்சரிக்கை உணர்வு, இந்த அரசிடம் குறைவாகஇருக்கிறதோ என்ற சந்தேகத்திற்கு இடமிருக்கிறது.
அணுகுண்டு வெடிப்பு நமக்கு பெரிய ஆபத்தைத் தேடித் தரும் என்று பலர் கூறினார்கள். ஆனால், வாஜ்பாய் கூறிய மாதிரி, அதனால் சர்வதேச அளவில் நமதுஅந்தஸ்து உயர்ந்துதான் இருக்கிறது.
கார்கிலில் முதலில் நடந்த கோளாறுக்கு யார் காரணம் என்பது இறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அதன் பின்னர் காட்டப்பட்ட உறுதி, நல்லவிளைவுகளைத் தந்தது.
ராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், ராஜரீக ரீதியாகவும் கார்கில் நல்ல முறையில் முடிந்தது. பாகிஸ்தானுடன் நட்புறவை ஏற்படுத்த வாஜ்பாய் செய்தமுயற்சியினால், இன்று நமது நாட்டின் வாதங்களுக்கு ஒரு மரியாதை வந்திருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், லாகூர் பஸ் பயணம் கூட வீணானது அல்ல.
இந்த அரசுக்கு ஒரு பெரும் வசதியும் இருக்கிறது. முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் தனது பலவீனத்திலிருந்து இன்னமும் மீளவில்லை. மீள்வதற்கானஅறிகுறியையும் காணோம். ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி, மூன்றாவது முன்னணி என்றெல்லாம் வெவ்வேறு பெயரில் அவ்வப்போது பிறந்து,அவ்வப்போது சாகிற எதிர்க்கட்சிகளின் கூட்டணியும், இப்போது சிதறிக் கிடக்கிறது. இதெல்லாம் வாஜ்பாயின் அரசுக்கு பேருதவி புரிகின்றன.
இப்படி வெளியே இருந்து கிடைக்கும் உதவியினால், உள்ளே இருந்து கிளம்பும் பிரச்னைகளையும், பா.ஜ.க. கூட்டணியால் சமாளிக்க முடிகிறது. இப்படிப்பட்டசூழ்நிலையில் மம்தா பானர்ஜி போன்ற கூட்டணியாளர்கள் முரண்டு பிடிக்கும்போது, வாஜ்பாய் இன்னமும் உறுதியைக் காட்டலாம். அப்படிச் செய்யாமல்அவர்களை சமாதானப்படுத்த முயல்வது அரசின் அந்தஸ்தைக் குறைக்கிறது.
இப்படி நிறைகுறைகள் இரண்டுமே இருந்தாலும், ஒரு விஷயம் வாஜ்பாயை தூக்கி நிறுத்துகிறது. அவர் நல்ல மனிதர் என்ற ஏற்பு, தேசம் முழுவதும்பரவிக் கிடக்கிறது.
விலைவாசி ஏற்றத்தைக் கூட மீறி எழுந்து நிற்கிற இந்த நற்பெயர், ஒரு வருட ஆட்சிக்குப் பின்னரும் கூட அப்படியே மங்காமல் இருக்கிறது என்பதுவாஜ்பாயின் சாதனைதான்.
இப்போதைக்கு இவருக்கு மாற்றாக ஒருவர் இல்லை - என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு அவர் நிதானத்துடன் செயல்பட்டிருக்கிறார். ஒருவருடத்தில் அவருடைய மிகப் பெரிய சாதனை இதுதான்.