குள்ள நரிக் குணமுண்டு...
சென்னை:
தமிழக முதல்வர் மு. கருணாநிதி சமீபத்தில் ஒரு கவிதை எழுதினார். கோட்டை ஒன்றுமிச்சம் உளதே என்ற தலைப்பில் ஜெயலலிதா பற்றியது அந்தக் கவிதை.
அக் கவிதைக்கு தன்னாலும் கவிதை மூலம் பதிலடி கொடுக்க முடியும் என்றுஜெயலலிதா நிரூபித்துள்ளார். குள்ளநரிக் குணமுண்டு என்ற தலைப்பில் அவர்எழுதியுள்ள கவிதை:
பொய்யை முதலாக்கிப் புனைசுருட்டைக் கதையாக்கி
ஐயா தமிழகத்தை ஆள்வதுதான் ஏன்? என்றேன்
சுரண்டிச் சேர்த்ததெல்லாம் வறண்டிக் குவித்ததெல்லாம்
அப்படியே சந்ததிகள் அனுபவிக்க என்றுரைத்தார்.
விஞ்ஞான ஊழலுக்கு விளை நிலமாய் ஆன பின்னும்
உத்தரமராய்ப் பேசுவதும் உளறுவதும் ஏன்? என்றேன்
ஏமாந்த பேர்வழிகள் இன்னும் இருப்பதனால்
வாய்ப்பந்தல் போட்டபடி வாழ்கின்றேன் என்றுரைத்தார்.
நான்கு மகன்களுக்கும் நாடெங்கும் சொத்துக்கள்
வாங்கிக் குவிப்பதற்கு வாய்ப்புகள் ஏது? என்றேன்.
ஆட்சி அதிகாரம் அத்துணையும் பயன்படுத்தி
நாட்டைத் திருடித்தான் நான் கொடுத்தேன் என்றுரைத்தார்
கோபால புரமெல்லாம் அரண்மனைகள் வந்ததற்கு
வியாபாரம் செய்ததுண்டா விளம்புங்கள்? என்றுரைத்தேன்
அரிசியில், கோதுமையில் அப்படியே சர்க்கரையில்
கொள்ளையிட்டுக் குவித்ததுதான் கோபாலபுரம் என்றார்
பெட்டி பெட்டியாய் கொடுத்தோம் பெட்டியும் தரவில்லை
என்றுரைத்த சாட்சியத்தால் ஏதேனும் வருத்த முண்டா?
வறண்டும் குணமுள்ளார் வருந்த மாட்டார் என்னைப் போல்
திருடும் குணமுள்ளார் திருந்தமாட்டார் என்றுரைத்தார்.
மதுரையைக் கொள்ளையிட மகனை அனுப்பி வைத்து
பீற்றித் திரிவதில் பெருமையா? எனக் கேட்டேன்.
தென் மதுரை மட்டுமல்ல தென்பாண்டி மண்டலத்தைப்
பகற்கொள்ளை அடிப்பதற்கு பாராட்டு என்றுரைத்தார்.
கோவைக்கும் ஒரு மகனை கொள்ளை அடிப்பதற்கு
ஆர்வமுடன் அனுப்பி வைத்தல் அநியாயம் என்றுரைத்தேன்.
கொங்கு சீமை முழுவதையும் கொள்ளை அடித்தபடி
தங்கமகன் வாழ்வதிலே தனிப்பெருமை உண்டு என்றார்
மாநகர மேயரென்று மக்களைச் சுரண்டுகின்ற
ஒருமகனை அரசியலில் உயர்த்துவது ஏன்?என்றேன்
என்னிடத்தில் இருக்கின்ற எல்லாத் தீமைகளும்
அவனிடம் உள்ளதால் அவன் உயர்ந்தான் என்றுரைத்தார்.
உங்கள் குடும்பத்தை உயர்த்துவது அல்லாமல்
வேறு குணம் உண்டா? விளம்புங்கள் என்றுரைத்தேன்.
எதிரிகளைத் தாக்கி எல்லைமீறி அழித்துக்
குதறுகின்ற குள்ளநரிக் குணமுண்டு என்றுரைத்தார்
சாகும் வயதினினும் சதி விரிக்கும் பொல்லாத
தீய குணம் உங்களுக்குத் தேவையா? எனக் கேட்டேன்
சாகும்போதும் சதி செய்தே சாகவேண்டும என்
சாம்பலும் சதி மணந்தே வேகவேண்டும் என்றார்.