தமிழகத்தில் முழுவீச்சில் தேர்தல்பணிகள்
நாகப்பட்டினம்:
தமிழக சட்டசபைத் தேர்லுக்கான 2 ம் கட்ட பணிகள் வரும் டிசம்பர் மாதம் 11 ம் தேதிக்குள் முடிந்து விடும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிசாரங்கி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நாகப்பட்டினத்தில் தேர்தல் பணிகளைப் பார்வையிட்டுவிட்டு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மாவட்டந்தோறும் நடக்கும் தேர்தல் ஆயத்தப்பணிகள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் பணிகளை தலைமைத் தேர்தல் அதிகாரி கில்பார்வையிட வருகிறார். அவர் இம்மாதம் 12 மற்றும் 13 ம் தேதிகளில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு வருகிறார்.
ஜனவரி மாதம் 2 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மாநிலம் முழுவதும் இதுவரை 61 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டைகள்வழங்கப்பட்டுள்ளன என்றார் சாரங்கி.