நாளை காட்டுக்குச் செல்கிறது தூதுக்குழு
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்கும் இறுதிக் கட்ட முயற்சியாக, தூதுக்குழு ஞாயிற்றுக்கிழமை காட்டுக்குச் செல்கிறது.
இதுகுறித்து நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் சனிக்கிழமை கூறியதாவது:
வீரப்பனிடமிருந்து, நடிகர் ராஜ்குமாரை மீட்க அரசுத் தூதுக்குழு கடந்த வாரம் காட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது.
ஆனால் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனை தேச விரோத சக்தி என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியதால்காட்டுக்குப் போக மாட்டேன் என்று நெடுமாறன் கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து நடிகர் ராஜ்குமாரின் மகன்கள், அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தமிழக முதல்வர்கருணாநிதி, டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் நெடுமாறன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து நெடுமாறன் தனது முடிவை மாற்றிக் கொண்டு காட்டுக்குச் செல்ல சம்மதித்து விட்டார்.
இந்த நிலையில் வீரப்பனுடன் 6 வது முறையாக பேச்சு வார்த்தை நடத்த அரசு தூதுக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னையிலிருந்து சத்யமங்கலம்காட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள். மாலையில் அவர்கள் காட்டுக்குச் செல்வார்கள்.
பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுச்சேரி சுகுமாறன் ஆகியோர் காட்டுக்குப் போவார்கள். நக்கீரன் கோபால் தனியாகக் காட்டுக்குச்செல்வார். காட்டு எல்லையில் நான்கு பேரும் ஒன்றாகச் சேர்ந்து வீரப்பனைச் சந்திக்கப் புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்த முறை சாதகமான சூழ்நிலை இருப்பதால் 2 அல்லது 3 நாட்களில் தூதுக் குழுவினர் நடிகர் ராஜ்குமாரை மீட்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் காமராஜ்.












Click it and Unblock the Notifications