நீலகிரியில் தாமரை ரத யாத்திரை
கோவை:
பாரதிய ஜனதா நடத்தும் தாமரை ரத யாத்திரை நீலகிரியில் தொடங்கியது. இந்த ரத யாத்திரை கோவை, ஈரோடு, சேலம்மாவட்டங்கள் வழியாக திருச்சியை அடைகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் முன்னோட்டமாகவும், தனது சின்னத்தை கிராமங்கள் தோறும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திலும்,வாஜ்பாய் அரசின் சாதனைகளை விளக்கிச் செல்லவும் பாரதிய ஜனதா தமிழகம் முழுவதிலும் "தாமரை ரத யாத்திரை நடத்த முடிவுசெய்தது.
இந்த தாமரை ரத யாத்திரையின் முக்கிய நோக்கமே, வாஜ்பாய் அரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமானால் தாமரைக்குவாக்களிக்க வேண்டும் என்ற உட்கருத்தை மக்களிடையே பரப்ப வேண்டும். இதற்கு எளிதாக தாமரை ரத யாத்திரையை பா.ஜ.,தமிழகத்தில் பல இடங்களில் துவக்கியுள்ளது.
மாநிலத் தலைவர் கிருபாநிதி இந்த ரத யாத்திரையை திங்கள்கிழமை நீலகிரி மாவட்டத்தில் உள்ள எருமாடு என்ற இடத்தில்துவக்கினார். இதே போன்று தேன்கனிக் கோட்டையில் மாநில பா.ஜ. பொதுச் செயலர் இல.கணேசன் துவக்கினார். எருமாடுநிகழ்ச்சியில், மாநில வர்த்தகப் பிரிவுத் தலைவர் சேகர், தொகுதி எம்.பி., மாஸ்டர் மாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநிலத் தலைவர் கிருபாநிதி துவக்கிய தாமரை ரத யாத்திரை, 14ம் ததி நீலகிரி மாவட்டத்தைக் கடந்து மேட்டுப்பாளையம்வருகிறது. 15ம் தேதி கோவை மாவட்டத்திலும், 17ம் தேதி கோவை மாநகரிலும், 18ம் தேதி திருப்பூரிலும், 19ம் தேதி கோவைதெற்கு மாவட்டத்திலும் பயணத்தை தொடர்கிறது.
நவம்பர் 19ம் தேதி முதல் 21 ம் தேதி வரை ஈரோட்டிலும், 23ம் தேதி தர்மபுரி, சேலம் மாவட்டங்களிலும், 28, 29 ம் தேதிசங்ககிரியிலும் பயணம் மேற்கொள்கிறது. 30 ம் தேதி நாமக்கல் வழியாகவும், டிசம்பர் 1 கரூர் மாவட்டத்திலும், பயணம்செய்கிறது.
இறுதியாக 2ம் தேதி திருச்சியை அடையும் இந்த தாமரை ரத யாத்திரை முடிவில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடக்கிறது.