ராஜ்குமார் விடுதலை: கடத்தப்பட்ட பண்ணைக்கு செல்கிறார்
சென்னை:
கடந்த 108 நாட்களாக வீரப்பன் பிடியில் இருந்து வந்த கன்னட நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.
அவரை வீரப்பன் செவ்வாய்க்கிழமை இரவில் விடுவித்தான் என தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக சட்டஅமைச்சர் சந்திரே கெளடா, நடிகர் அம்பரீஷ் ஆகியோர் பெங்களூரில் நிருபர்களிடம் புதன்கிழமை காலைதெரிவித்தனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் கிருஷ்ணாவும் இத் தகவலைத் தெரிவித்தார்.
காட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட ராஜ்குமார், பவானி அருகே உள்ள அவள்பூந்துறை என்ற இடத்தில் அரசு சுற்றுலாமாளிகையில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து நெடுமாறனுடன் ஒரே காரில் அவர் தொட்டகாஜனூர்பண்ணை வீட்டுக்குச் செல்கிறார். இந்த இடத்திலிருந்து தான் ராஜ்குமார் கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பண்ணை வீட்டில் ஒரு நாள் தங்கிவிட்டு வியாழக்கிழமை பெங்களூர் திரும்ப அவர் திட்டமிட்டுள்ளார் எனகிருஷ்ணா கூறினார்.
பெங்களூரில் ராஜ்குமார் மருத்துவனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் எனத் தெரிகிறது.
கருணாநிதி அறிக்கை:
இந் நிலையில் சென்னையில் முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில்
ராஜ்குமார் விடுவிக்கப்பட்டுவிட்டார். என்னிடம் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைவிடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
முரசொலி மாறனின் உடல் நிலை குறித்து விசாரித்தார். 3 மாதம் காட்டில் இருந்து விட்டீர்களே எனக் கேட்டேன்,அதற்கு பதிலளித்த ராஜ்குமார், ராமரே 14 வருடம் காட்டில் இருந்தாரே என்றார்.
பின்னர் நெடுமாறனுடன் அவர் ஒரே காரில் காட்டுப் பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
ராஜ்குமார் மிகவும் களைத்துப் போயுள்ளார். நெடுமாறனும் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
தமிழகத்துக்கு நன்றி சொல்வதற்காக சில நாட்களில் சென்னைக்கு வருவதாகவும் ராஜ்குமார் தெரிவித்தார் என்றார்.
கடந்த ஜூலை 30ம் தேதி அவர் கடத்திச் செல்லப்பட்டார்.
நக்கீரன் கோபால் பல முறை வீரப்பனுடன் பேசியும் அவரால் ராஜ்குமாரை விடுவிக்கஇயலவில்லை. ஆனால், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தனதுஇரண்டாவது பயணத்திலேயே ராஜ்குமாரை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
வீரப்பனுக்கு தமிழ் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்ட பின் கோபாலை அவன் ஒதுக்கஆரம்பித்துவிட்டான்.
ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், மைசூர் சிறையில் உள்ள 121 தமிழ் தடா கைதிகளை விடுவிக்கவேண்டும், தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தீவிரவாதிகள் 5 பேரை விடுவிக்க வேண்டும் என வீரப்பன் கோரிக்கைவைத்திருந்தான். ஆனால், இந்த இரு பிரச்சனைகளும் இப்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
தடா கைதிகளையும், தீவிரவாதிகளையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், இருமாநில அரசுகளையும் கடுமையாக சாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நிபந்தனைகளை ஏற்றுகைதிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்பதை வீரப்பன் தெளிவாகப் புரிந்து கொண்டதால் தான்ராஜ்குமாரை விடுவித்துள்ளான்.
வீரப்பனுக்கு ரூ. 30 கோடி வழங்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. ஆனால், இதை தமிழகம் மறுத்துள்ளது.
கோபால் இன்னும் ஈரோட்டில் தான் இருக்கிறார்.
ஈரோட்டில் ராஜ்குமார் குடும்பம்:
முன்னதாக இரவில் ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே ராஜ்குமாரின் குடும்பத்தினர்அதிகாலையில் ஈரோட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தொட்டகாஜனூரில் ராஜ்குமாரை சந்திப்பர்.பின்னர் அனைவரும் சேர்ந்து பெங்களூர் திரும்புவர் எனத் தெரிகிறது.