அசாமில் 6 பேர் படுகொலை
கவுஹாத்தி:
அசாம் மாநிலம் சிவ்சாகர் மாவட்டத்தில் உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் பிகாபர் என்ற இடத்தில் வியாழக்கிழமை இரவு நடந்தது. பிகாபரில், உல்பா தீவிரவாதிகள் ஒரு கும்பலாக வந்து, வியாபாரி ஒருவரைநோக்கிக் கண் மூடித்தனமாகச் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்தக் கும்பல் தனது வெறித் தாக்குதலை தொடர்ந்தது.இதில் மேலும் 5 பேர் இறந்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதக் கும்பல் தங்களிடம் ஏகே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்தாக தெரிகிறது. உயர் போலீஸ் அதிகாரிகள்படுகொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் அசாம் மாநிலத்தில் நடந்த ஆறாவது படுகொலைச் சம்பவமாகும்இது.
அசாமில் நடந்து வரும் படுகொலைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாநில பாரதிய ஜனதா கட்சித்தலைவர்கள், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து அசாம் நிலவரம் குறித்து அறிய 5 நாடாளுமன்ற எம்.பிக்கள் கொண்ட குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு கடந்த இரண்டு நாட்களாக, அசாம் மாநிலத்தில் முகாமிட்டு படுகொலை சம்பவங்கள் குறித்து விசாரித்து வருகிறது. மேலும் நல்பாரிமாவட்டத்தில் படுகொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியது.
பின்னர், இவர்கள் வியாழக்கிழமை முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவையும் நேரில் சந்தித்து படுகொலை சம்பவங்கள் குறித்து விவாதித்தனர்.
2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை:
முன்னதாக, திப்ரூகர் மாவட்டம், கோகுலானி கிராமத்தில் ராணுவ வீரர்கள், தாக்குதல் நடத்தியதில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.அவர்கள் பெயர் அமல்போரா மற்றும் திலக் குர்மி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.