எம்.எல்.ஏயைத் தாக்கிய 14 பேர் கைது
ஊட்டி:
ஊட்டி எம்.எல்.ஏ., குண்டனைத் தாக்கிய வழக்கில் 14 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு த.மா.கா.,வும், அ.தி.மு .க.,வும் தான் காரணம் என குண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊட்டி எம்.எல்.ஏ., குண்டன் பொதுமக்களைச் சந்திக்க பல்வேறு இடங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்தார். மீக்கேரி என்ற கிராமத்தில் பயணம் செய்துவிட்ட மணியட்டி என்ற இடத்திற்கு காட்டுப் பாதையில் நடந்து சென்றார். அவர் திரும்பி வரும்போது நீலகிரித் தேயிலை பிரச்னை குறித்து ஒரு கும்பல்கேள்வி எழுப்பி, குண்டனை சரமாரியாகத் தாக்கியது. இந்த தாக்குதலில் சட்டை பேன்ட் கிழிந்து காலில் ரத்தம் ஒழுக ஓடி வந்தார் எம்.எல்.ஏ.
ஊட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குண்டன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தன் மீது நடந்த தாக்குதலுக்கு அ.தி.மு.க.,வும், தமிழ் மாநிலகாங்கிரசும் தான் காரணம் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இப் பிரச்னை குறித்து ஊட்டி தி.மு.க செயற்குழுக் கூட்டம் கூடி கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவத்தைக் கண்டித்து ஊட்டி மற்றும் நீலகிரியில்ஞாயிற்றுக்கிழமை கடை அடைப்பு நடத்தவும் தீர்மானித்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இது வரை 14 பேரைக் கைதுசெய்துள்ளனர்.
இதில், மணியட்டியைச் சேர்ந்த குமார், நேரு, அய்யாக்குமார், சந்திரன், சுகுமாறன், கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி ஆகியோரை நவ.17ம் தேதி கைது செய்தனர்.தி.மு.க செயற்குழுத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, மேலும் 7 பேரைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.