சாங்கிலியானா-தமிழக அதிகாரிகள் ஆலோசனை
சத்யமங்கலம்:
கர்நாடக அதிரடிப்படை தலைவர் சாங்கிலியானா வெள்ளிக்கிழமை பண்ணாரி முகாமுக்குச் சென்று அங்கு தமிழக போலீஸ் அதிகாரிகளுடன் வீரப்பனைப் பிடிப்பதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
பண்ணாரி முகாமில் தமிழக அதிரடிப் படைத் தலைவர் ஐ.ஜி.பாலச்சந்திரன், டிஐஜி. தமிழ்ச்செல்வன், சூப்பிரண்டுகள் சைலேந்திர பாபு, அசோக்குமார் தாஸ், பெரியய்யாமற்றும் அதிகாரிகளுடன், சங்கிலியானா ஆலோசனை நடத்தினார்.
ஒருங்கிணைப்பு:
தமிழக-கர்நாடக அதிரடிப்படையினர் எந்த வகையில் ஒருங்கிணைந்து செயல்படுவது, வீரப்பனைப் பிடிப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பதுபோன்றவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
22 பேர் கொண்ட குழு:
சேர்மாளம் என்ற இடத்தில் இருந்து காணிகுந்தூர் வரை கர்நாடக அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் சிவனப்பா தலைமையில் 22 பேர் கொண்ட குழு கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டு வருகிறது.
தேடுதல் வேட்டை:
தற்போது தேடுதல் வேட்டையில் 25 பேர்களைக் கொண்ட 16 குழுக்கள் உள்ளன. இந்த 25 பேரில் 5 பேர் அதிரடிப்படையினர். 20 பேர் ஆயுதப்படைப்போலீஸார்.
இந்தப் 16 குழுக்களும் காட்டுக்கு வெளியே வரக்கூடாது. அங்கேயே முகாம் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தியூரைச் சுற்றியுள்ள தோணிமடுவு, தேவர்மலை, செங்குளம், கீழ தோப்பு, ஜல்லிப்பாளையம், மீன்தாங்கி, வேலாம்பட்டி பகுதிகளில் நவீன ரகஎஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளுடன் அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டைடைத் தொடங்கியுள்ளனர்.
ஆலோசனை:
தமிழக அதிரடிப்படை வீரர்களின் ஒரு பகுதியினர் அந்தியூர் பக்கமுள்ள வரட்டுப்பள்ளம் முகாமில் தங்கியுள்ளனர். அங்கு அதிரடிப்படை ஐ.ஜி.பாலச்சந்திரன், ஈரோடுமாவட்ட போலீஸ் சூப்ரிடென்ட் அசோக்குமார் தாஸ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
முன்னதாக, அதிரடிப்படை வீரர்களுக்கு, தினமும் மாலை 6 மணிக்கு ஒயர்லெஸ் மூலம் முகாமுக்குத் தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்றும், தாங்கள்சந்திக்கும் நபர்கள், தங்கியுள்ள இடங்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.