தமிழக புயல் - மழைக்கு 12 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழையில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான புயல் புதன்கிழமை பிற்பகல் கடலூர் அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலும்,புதுச்சேரியிலும் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான குடிசைகளும் சேதமடைந்தன.
இந்தப் புயல் மழைக்கு தமிழகம் முழுவதும் 12 பேர் பலியாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். வயது 27. சிமென்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் மகேஷ். இவர் தனதுசைக்கிளில் காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அங்குள்ள பாலத்தையும் தாண்டி மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில் அவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
நெல்லிக்குப்பம் அருகே குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வீரராகவன் (45) என்பவர் சூறாவளிக் காற்றில் குடிசை சரிந்து விழுந்ததில் இறந்தார். அதேபகுதியைச் சேர்ந்த சிறுமி பாக்கியலட்சுமியும் வீடு இடிந்து விழுந்ததில் இறந்தார்.
பண்ருட்டி அருகே வயலுக்குச் சென்ற பலராமன் (45) பலத்த மழையில் கொட்டகை சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.
திட்டக்குடியை அடுத்த மங்களூரைச் சேர்ந்த பிரியா என்ற 12 வயது சிறுமி வீடு இடிந்து விழுந்ததில் இறந்தார்.
சிதம்பரம் அருகேயுள்ள வீரசோழகன் ஊரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மழை வெள்ளத்தால் வயலில் வழுக்கி விழுந்து இறந்தார். சிதம்பரத்தை அடுத்துள்ளஆலம்பாடியைச் சேர்ந்த சேகர் (32) என்பவர் வீட்டு சுவர் இடிந்து விழுந்து இறந்தார்.
மின்சாரக் கம்பியை மிதித்து சாவு:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ராமு, நடராஜன் ஆகியோர் மின்சாரக் கம்பியை மிதித்து இறந்தனர்.
ஆற்றில் குளிக்கச் சென்ற பாலகிருஷ்ணன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவர் நாகை மாவட்டம் சோழபுரத்தைச் சேர்ந்தவர்.
மீனவர்கள் பலி:
சென்னை ராயபுரம் புதுவண்ணார்பேட்டையச் சேர்ந்த மீனவர்கள் கன்னியப்பன், அவரது மகன் லோகநாதன் ஆகியோர் கட்டு மரத்தில் மீன் பிடிக்கச் சென்றனர்.அவர்களது படகு பாறையில் மோதியதில் அவர்கள் இருவரும் இறந்தனர்.
புயலின் காரணமாக புதுச்சேரியிலுள்ள தேங்காய்திட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் விழுந்தது. இதில் ஏழுமலை (45) என்பவர் பலியானார்.13 பேர் இச்சம்பவத்தில் காயம் அடைந்தனர்.