பிகார் முதல்வர் வீட்டில் துப்பாக்கிச் சூடு
பாட்னா:
பிகார் மாநில முதல்வர் ராப்ரி தேவியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் பாதுகாவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
பாட்னா கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் ஆஷிஷ் ரஞ்சன் சின்ஹா இது குறித்துக் கூறியதாவது:
சித்தாமராஹி பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குமார் நிராலா. அவரது தந்தையை அடையாளம் தெரியாத சிலர் கொலை செய்தனராம். அதே போல் அவரதுமனைவியை சமீபத்தில் யாரோ கடத்திச் சென்று விட்டனராம்.
இதுகுறித்துப் புகார் கொடுப்பதற்காக இவர், முதலமைச்சர் ராப்ரி தேவி வீட்டுக்கு வந்தார். அவரை உள்ளே விட பாதுகாவலர்கள் அனுமதிமறுத்ததையடுத்து அவர், பாதுகாவலர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, பாதுகாவலர்கள் அவரைக் கைது செய்து அவரிடமிருந்துநாட்டுத் துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றினர் என்றார்.
கைது செய்யப்பட்ட திலீப் குமார் மீது சச்சீவாலயா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின்துறை அமைச்சர்:
இதற்கிடையே, பிகார் மாநில மின்துறை அமைச்சர் ஷியாம் ராஜா கூறுகையில், பிகாரில் தீவிரவாத அமைப்பான மனுவாதி படையைச் சேர்ந்தவர்கள்தான் திலீப் குமார் என்ற வாலிபரை அனுப்பி வேவு பார்த்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications