கிறிஸ்துமஸ்: முதல்வர், கவர்னர் வாழ்த்து
சென்னை:
திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதையடுத்து தமிழக முதல்வர் கருணாநிதி, கவர்னர் பாத்திமா பீவி ஆகியோர் பொதுமக்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
கவர்னர் வாழ்த்துச் செய்தி:
கவர்னர் பாத்திமா பீவி தனது வாழ்த்துச் செய்தியில், இந்தக் கிறிஸ்துமஸ் நன்னாளில் நாடு முழுவதும் அமைதியும், தேச ஒற்றுமையும் ஏற்பட வேண்டும்.மகிழ்ச்சியான இந்த கிறிஸ்துமஸ் திருநாளில் விழா கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் வாழ்த்து:
ஏசு பிரான் தன் மேல் சுமத்தப்பட்ட பழிகளையும், குற்றங்களையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு, பொறுமை காத்து சிலுவை சுமந்தார். அவருக்குச்சிறப்புச் செய்யும் வகையில் இந்தக் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
நாமும் ஏசுபிரான் போல் நீண்ட பொறுமை காத்து, நாடு முன்னேறப் பாடுபட வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, நட்புணர்வுடன் பழகவேண்டும். அன்பு, தியானம், பொறுமை ஆகியவற்றை நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். மன்னிக்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில்குறிப்பிட்டுள்ளார் முதல்வர்.
முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ராம வீரப்பன் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.