மேடையில் மயங்கி விழுந்தார் எழுத்தாளர் சாவி
சென்னை:
சென்னையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் சாவி திடீரென மயங்கி விழுந்தார்.
மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எழுத்தாளர் சாவியின் 85 வது பிறந்தநாளையொட்டி எழுத்தாளர் ராணி மைந்தன் சாவி 85 என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்தப் புத்தக வெளியீட்டுவிழா சென்னை நாரத கான சபாவில் நடந்தது.
முதல்வர் கருணாநிதி விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். மேயர் ஸ்டாலின் முதல் இதழைப் பெற்றுக் கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் சாவி, மேடையில் பேசும்போது தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறி பேச்சைப் பாதியிலேயே நிறுத்தி விட்டுஇருக்கைக்குத் திரும்ப முடியாமல் மைக்கைப் பிடித்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி கீழே விழுந்தார்.
இதைப்பார்த்ததும் பதறிப்போன முதல்வர் கருணாநிதியும், மேடையில் இருந்த மற்ற பிரமுகர்களும் சாவியை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால்அவருக்கு மயக்கம் தெளியவில்லை. விழா அரங்கத்திலும் பதட்டம் ஏற்பட்டது. எல்லோரும் மேடையை நோக்கி வந்தனர்.
உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்பல்லோவில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் அதிர்ச்சி:
சாவியை வாழ்த்துவதற்காக நாம் இங்கே கூடியிருந்தபோது அவர் மயங்கி கீழே விழுந்தது நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. புத்தகவெளியீட்டு விழாவில் நம்மோடு பங்கு கொள்ள முடியாதபடி அவர் மயங்கி விழுந்தது மனதை கலங்க வைக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications