குலுங்கியது குஜராத் ... பீதியில் மக்கள்
அகமதாபாத்:
ஏறத்தாழ 181 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட 2 வது பெரிய பூகம்பம் இது என்று விஞ்ஞானிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
குஜராத் மக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாநிலத்தையே உலக்கி விட்டது பூகம்பம். இந்த பூகம்பத்தால் குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள்அழிந்து விட்டன என்றே கூறலாம்.
பல மாடிக்கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்கிடையே மனித சடலங்கள் குற்றுயிரும்,குலையுயிருமாகக் காட்சியளித்தன.
பொதுமக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். வீட்டுக்குள் செல்வதற்கே பயந்து அவசர அவசரமாக வெளியே வந்து விடுகின்றனர். பெண்கள்வீட்டுக்குள் சென்று வேகமாக சமையல் செய்து விட்டு, தங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விடுகின்றனர். மக்கள் இன்னும்அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
பாருல் கஜார் என்ற பெண் கூறுகையில், இந்த நிலநடுக்கத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டோம். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படாது என்று எந்தஉத்தரவாதமும் இல்லை.
எங்களது பக்கத்து வீடுகள் பல பூகம்பத்தால் இடிந்து விழுந்து விட்டன. நாங்கள் இரண்டு நாட்களாக வீட்டுக்குள் செல்லவேயில்லை. திரும்பவும் நிலநடுக்கம்ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்து விடுமோ என்று பயமாக உள்ளது என்றார்.
வெள்ளிக்கிழமை காலை குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 40 வினாடிகள் நீடித்தது. காலை 8.46மணிக்கு 6.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியும், குஜராத் மாநில முதல்வர் கேசு பாய் படேலும் நேரில் சென்றுபார்வையிட்டனர்.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் குஜராத் வந்த அத்வானி நிருபர்களிடம் கூறுகையில், எல்லா இடங்களிலும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.மத்திய அரசு அனைத்து விதமான மீட்புப் பணிகளையும் செய்யும். ராணுவ வீரர்கள் மற்றும் விமானப் படை வீரர்கள் மீட்புப்பணிகளை மேற்கொள்வார்கள்என்றார்.
ஆனால் அத்வானியின் இந்த ஆறுதல் வார்த்தைகள் குஜராத் மக்களை ஒரு துளி கூட திருப்திபடுத்தவில்லை. அவர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
இருப்பினும் குஜராத்தைச் சேர்ந்த பலர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் மற்றும் இதர உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளனர். பல சமூக சேவைநிறுவனங்கள் மருத்துவ உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளன.
உறவினர்களை இழந்து நடுத்தெருவில் தவித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இவர்கள் உதவி செய்து வருகிறார்கள். காயமடைந்தவர்களுக்குமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய தொழிலகத்துறை பாதுகாப்புப்படை, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், சர்தார் சேவா தளத் தொண்டர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
மேலும் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்குத் தேவையான உணவுப்பொட்டலங்கள், டீ , காபி ஆகியவற்றையும் இவர்கள் கொடுத்து வருகிறார்கள்.மொத்தம் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 சதவீதம் பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன என்று அகமதாபாத் மாநகராட்சிஅதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications