விடிய விடிய மீட்புப் பணி
அஹமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு பகலாக மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, முப்படை வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸார், என்.சி.சி.மாணவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள்மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் பூஜ் மற்றும் அகமதாபாத் மாவட்டங்கள் சிதைந்து கிடக்கின்றன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.50 ஆயிரம் பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 75 ஆயிரம் பேர் 3 நாட்களாக இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர்.
சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து நிபுணர் குழுவினர்கள், மோப்ப நாய்கள், கனரக இயந்திரங்கள், கிரேன்களுடன் குஜராத்விரைந்துள்ளனர்.
மோப்ப நாய்ப்படை குஜராத் வந்திறங்கியவுடன் விக்கி (10) மற்றும் மோனாசங்கி (35) என்ற இரண்டு பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டனர்.
வழக்கமாக புல்டோசர் மற்றும் கிரேன்கள் உதவியுடன்தான் சடலங்களை மீட்பது வழக்கம். ஆனால் இந்த முறை சுவிட்சர்லாந்து நாட்டின் உதவியுடன்மோப்ப நாய்கள் மூலம் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்படுகிறார்கள்.
மோப்ப நாய்கள் இடிந்து கிடக்கும் கட்டிடங்களில் ஏறி நின்று கொண்டு மோப்பம் பிடிக்கின்றன. அந்த இடத்தில் யாராவது இறந்து கிடந்தால் அங்குநின்று கொண்டு குரல் கொடுக்கின்றன. அந்த இடத்துக்கு மீட்புப் பணியாளர்கள் சென்று சடலங்களை மீட்டு வருகிறார்கள்.
நிலநடுக்கம் ஏற்பட்டு 3 நாட்கள் ஆகியும் இடிபாடுகளுக்கிடையில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாகக் கணிக்கமுடியவில்லை. நேரம் கடந்து கொண்டே இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் முக்கியமாகக் கருதி மீட்புப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.