அமெரிக்கா உதவும் ..புஷ்
லக்னோ:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ ஜூனியர் புஷ்,தொலைபேசி மூலம் வாஜ்பாயுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. நிதியுதவி, நிவாரணப்பொருட்கள் மட்டுமின்றி மீட்புக்குழுவினரையும் உலக நாடுகள் அனுப்பி வைத்து வருகின்றன.
இதற்கிடையே குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்காஅறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜூனியர் புஷ், செவ்வாய்க்கிழமை பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கூறுகையில், மிகவும் சிக்கலான சமயத்தில் நண்பர்களுக்கு உதவி செய்வது போல் அமெரிக்கா பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்குத்தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது.
குஜராத் மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண உதவிப் பொருட்களை ஏற்கனவே இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டோம் என்றார் அவர்.பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாய் தனது சொந்தத் தொகுதியான லக்னோவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அவர் லக்னோவில்இருக்கும்போதுதான், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஜூனியர் அவரைத் தொடர்பு கொண்டு பேசினார்.