அடுத்த ஆட்சி யாருடையது .. கருத்துக் கணிப்பு
சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் கூட்டணி ஆட்சியே அமையும் என்று சென்னை லயோலாக் கல்லூரி, பண்பாடு மற்றும் மக்கள் தொடர்பகஆய்வாளர்களின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
தமிழகத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கூட்டணிகள் உருவாவதற்கு முன்பே நடத்தப்பட்டுள்ள இக்கருத்துக்கணிப்பில் தி.மு.க.கூட்டணிக்கு சரிவும் (100 முதல் 110 சீட்டுகள் கிடைக்கும்), அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவும் (90 முதல் 100 சீட்டுகள் கிடைக்கும்) கிடைத்துள்ளன.
வரும் தேர்தலில் வாக்களிப்போர் சதவீதம் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவித்த கருத்துக்கணிப்பை நடத்திய குழுவின் தலைவர் பேராசிரியர் ச.ராஜநாயகம்,வாக்கு விகிதத்தில் நடிகர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக் குறைவு என்கிறார்.
தமிழக அளவிலான பிரச்சினைகளைவிட தங்களை நேரடியாக பாதிக்கும் விஷயத்தில் உடனே தீர்வு காணப்படவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.எனவே, மக்கள், அரசியல் கட்சிகள் கூறும் ஊழல் குற்றச்சாட்டிற்கு முக்கியத்துவம் தரப்போவதில்லை.
சாதிக் கட்சிகளின் பாதிப்பு இத்தேர்தலில் இருக்கக்கூடும் எனினும் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் பாதிப்பு முக்கிய கட்சிகளுக்குத்தான்.
தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் 2250 பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
லயோலாக் கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன் துறையும், சமூக அறிவியல் ஆய்வு மையமும் சேர்ந்து நடத்திய இக்கருத்துக்கணிப்பு பற்றி நிருபர்களுக்குவிளக்கியபோது கல்லூரி முதல்வர் ஜோசப் சேவியர், கவிஞர் அறிவுமதி, கருத்துக்கணிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.