திமுக கூட்டணியில் சிதம்பரத்துக்கு கூடுதல் இடங்கள்?
சென்னை:
திமுக கூட்டணியில் ப.சிதம்பரத்தின் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகக் பேரவைக்குக் கொடுக்கப்பட்ட 3 இடங்கள் குறித்தான உடன்பாடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் சிதம்பரத்துக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து இவ்விரண்டு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இதுவரை 13 கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது.
திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதால் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதிக இடங்கள் கொடுக்குமாறுகூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
திங்கள்கிழமை சிதம்பரத்தின் ஜனநாயகப் பேரவைக்கு 3, எம்.ஜி.ஆர். கழகத்துக்கு 2, பார்வர்டு பிளாக் 1 என்ற முறையில் தொகுதிப்பங்கீடு செய்துகொடுக்கப்பட்டது. இதற்கான உடன்பாடு திங்கள்கிழமை காலை ஏற்பட்ட நிலையில் திங்கள்கிழமை இரவு புதிய தமிழகம் கட்சிக்கு 10 இடங்கள்ஒதுக்கப்பட்டது.
இன்னும் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க, த.ரா.கா, உழைப்பாளர் கட்சி, தமிழ் பா.ம.க மற்றும் தமிழர் பூமி ஆகிய 5 கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு செய்யவேண்டியுள்ளது.
திங்கள்கிழமை தொகுதிப்பங்கீடு அளிக்கப்பட்ட கட்சிகளில் புதிய தமிழகம் தவிர பிற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இதற்கிடையே, சிதம்பரத்தின் நண்பர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களான ரங்கநாதன் மற்றும் சுந்தரம் ஆகியோர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப்பேசினர்.
பேச்சுவார்த்தை முடிவில் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைக்கு 3 இடங்கள் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் முதல்வர் கருணாநிதிதிடீரென்று இந்த இடங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இது குறித்து பரிசீலித்து விரைவில் அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.
கருணாநிதி பேட்டி:
இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி திமுக 155 இடங்களிலோ அல்லது அதற்குக் கூடுதலான இடங்களிலோ போட்டியிடலாம் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கே: அதிமுகவில் ஒரு இடம் மட்டுமே கிடைத்த இந்திய தேசிய லீக்கைச் சேர்ந்த அப்துல் லத்தீப் அதை ஏற்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். அதேநேரம் லத்தீப் கட்சியைச் சேர்ந்த வேறு பலர் அதிமுகவில் இருக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இவர்கள் தனித்தனியாக இவ்வாறுஅறிவித்திருப்பது பற்றி ?
ப: இந்திய தேசிய லீக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைப் பற்றி நான் எதுவும் பேச முடியாது. அவர்களது பிரச்சனையில் நான் தலையிடுவது நாகரிகமாகஇருக்காது. அவர்கள் பிரச்சனையை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
கே: வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க எத்தனை இடங்களில் போட்டியிடும்?
ப: 155 இடங்களுக்கு அதிகமாக தி.மு.க போட்டியிடும்.
கே: எம்ஜிஆர் அதிமுக வுக்கு தொகுதிகள் கொடுக்கப்பட்டு விட்டதா?
ப: 2 இடங்கள்தான் கொடுக்க முடியும் என்று நாங்கள் கூறி விட்டோம். ஆனால் அவர்கள் அதிக இடங்கள் கேட்டு அறிக்கை விடுகின்றனர்.
கே: சிதம்பரத்துக்கு கொடுக்கப்பட்ட 3 தொகுதிகள் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து?
ப: அவர்கள் கூடுதலாகவோ குறைவாகவே தொகுதிகள் கேட்கவில்லை. செவ்வாய்க்கிழமை சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்துஇறுதி அறிக்கை வெளியிடப்படும்.
கே: புதிய தமிழகத்துக்கு 10 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வுக்குக் கொடுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறையுமா அல்லதுகூடுமா?
ப: கூடலாம் அல்லது குறையலாம்.
கே: பிற கட்சிகளுடன் எப்போது பேச்சுவார்த்தை நடக்கும்?
ப: செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.