த.மா.கா. கவுன்சிலர் படுகொலை
சென்னை:
சென்னை அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை அருகேயுள்ள பெருங்குடி பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்து வந்தவர் கர்ணன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.இவரது மகளுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. இதுதொடர்பாக பத்திரிகை கொடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு பத்திரிகை கொடுக்கச் சென்றிருந்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் கர்ணனைத் தேடினர். அப்போது, துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகிநகரில் பிணமாக கர்ணன் கிடந்தார். அவரது உடலில் பயங்கரமாக வெட்டிய காயங்கள் தெரிந்தன.
கர்ணனனைக் கொன்றது யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து மடிப்பாக்கம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ரவி மற்றும்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு துரைப்பாக்கம் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கர்ணன் முக்கிய குற்றவாளியாகசேர்க்கப்பட்டிருந்தார். அதற்குப் பழி வாங்கும் விதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.