19 ம் தேதி தமிழக அமைச்சரவை விரிவாக்கம்
சென்னை:
அமைச்சரவையை விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனையில் முதல்வர் ஜெயலலிதா தீவிரமாகஈடுபட்டுள்ளார். வரும் 19 ம் தேதி தமிழக அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
தமிழக சட்டசபைக்கு மே 10ம் தேதி நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிமுதல்வராகியுள்ளார்.
முதல்வர் பதவியை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டபோது, அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றனர்.பொன்னையன், தம்பித்துரை, அய்யாறு வாண்டையார், உப்பிலியாபுரம் சரோஜா, ஜெயக்குமார் ஆகியோரேஅவர்கள்.
தற்போது அமைச்சரயை விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைகளில் ஜெயலலிதா தீவிரமாகஇறங்கியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏக்கள் பட்டியலில் உள்ளவர்களில் அமைச்சராகும் தகுதி யாருக்கு உள்ளதுஎன்பது குறித்து அவர் தீவிரமாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
கடந்த முறை போலல்லாது, ஊழலற்ற, திறமை மிகுந்த ஆட்சியைக் கொடுக்க ஜெயலலிதா முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கேற்றார் போல திறமை மற்றும் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமேபொறுப்புகளைக் கொடுக்கவும் அவர் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
அந்த வரிசையில்தான் பொன்னையன், சரோஜா, ஜெயக்குமார் போன்றவர்களுக்கு அவர் அமைச்சர் பதவியைக்கொடுத்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அமைச்சரவை விரிவுபடுத்தும்போது, தென் மாவட்டங்களுக்கு கூடுதல் அமைச்சர் பதவியைக் கொடுக்கஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. காரணம், தென் மாவட்டங்களில் இருந்துதான் அதிகஎம்.எல்.ஏக்களை அதிமுக பெற்றுள்ளது.
மேலும் சென்னைக்கு மேலும் ஒரு அமைச்சர் பதவி கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. 4 தொகுதிகளில் மட்டுமேஇங்கு அதிமுக ஜெயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். உப்பிலியாபுரம் சரோஜா,எம்.ஜி.ஆர் காலத்து அமைச்சர். அவர் தவிர இளம் பெண் அமைச்சர் ஒருவரையும் நியமிக்க ஜெயலலிதா யோசித்துவருகிறார்.
ஆலந்தூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனைத் தோற்கடித்த வளர்மதியின் பெயரும் அமைச்சர் பதவிக்குஅடிபடுகிறது.
இதுதவிர, அதிக வாக்குகளை பெற்ற அதிமுக பெண் எம்.எல்.ஏவான கருப்பாயியின் பெயரும் அமைச்சர்பதவிக்கு அடிபடுகிறது. இன்னும் இரண்டு தினங்களில் அமைச்சர்களை ஜெயலலிதா முடிவு செய்து விடுவார்என்று தெரிகிறது.
19 ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம்:
வரும் 19 ம் தேதி அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்களை முதல்வர்ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.