சபாநாயகரானார் காளிமுத்து
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகராக டாக்டர் கா. காளிமுத்து வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன்துணை சபாநாயகராக வரகூர் அருணாச்சலம் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக 12-வது சட்டசபையின் சபாநாயகராக காளிமுத்துவும், வரகூர் அருணாச்சலம் போட்டியின்றி புதன்கிழமைதேர்வு செய்யப்பட்டனர். இதுதொடர்பான முறையான அறிவிப்பை சட்டசபையில், தற்காலிக சபாநாயகர் அப்துல்லத்தீப் வெளியிட்டார். அதன் பிறகு சபாநாயகர் பதவியேற்பு வைபவம் நடந்தது.
சபாநாயகராக காளிமுத்துவுக்கு அப்துல் லத்தீப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர் காளிமுத்துவைஅவை முன்னவரும், நிதியமைச்சருமான சி.பொன்னையனும், எதிர்க்கட்சித் தலைவர் க.அன்பழகனும் சேர்ந்துஅவைத் தலைவர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்ததும், துணை சபாநாயகர் தேர்வு குறித்து காளிமுத்து அறிவிப்புவெளியிட்டார். துணை சபாநாயகராக வரகூர் அருணாச்சலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார்.அதன் பிறகு வரகூர் அருணாச்சலத்திற்கு காளிமுத்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுக்குப் பின்னர் அவை முன்னவர் சி.பொன்னையன், எதிர்க்கட்சித் தலைவர் க.அன்பழகன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.
முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் நிறைந்தவர் சபாநாயகர் காளிமுத்து.அவரால் சபைக்குக் கண்ணியம் கூடியுள்ளது என்றார்.
அனைத்துத் தலைவர்கள் வாழ்த்துக்குப் பின் சபாநாயகர் காளிமுத்து நன்றி தெரிவித்துப் பேசினார். மக்கள்பிரச்சினைகளை முன் வைத்து மக்கள் பிரதிநிதிகள் பேசுகையில், அவர்களது வாதங்களுக்கு பாரபட்சமின்றிமுன்னுரிமை கொடுப்பேன். ஜனநாயக விதிமுறைக்கு உட்பட்டு நடக்கும் யாருக்கும் முன்னுரிமை கொடுத்து பேசவாய்ப்பளிக்கப்படும் என்றார் காளிமுத்து.