ஜெ.மீதான வருமான வரி வழக்கு: சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை
சென்னை:
வருமானவரி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த ஜெயலலிதா தரப்புக்குஅனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
1993-94ம் ஆண்டுக்கான வருமானவரி செலுத்தவில்லை என வருமானவரித் துறையினர் ஜெயலலிதா மீது வழக்குதொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அனைத்துசாட்சிகளிடமும் விசாரணை முடிந்து விட்டது.
இந்நிலையில் வருமானவரித்துறையில் மேலும் புதிய ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் அரசு தரப்பு சாட்சிகளைமீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி மனு தாக்கல்செய்தார்.
ஆனால் இதற்கு வருமானவரித்துறை வழக்கறிஞர் ராமசாமி ஆட்சேபணை தெரிவித்தார். அவர் தனது வாதத்தில்கூறுகையில், வருமானவரி கட்டவில்லை என்பதை ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.
வழக்கு விசாரணை முடிந்துவிட்ட நிலையில் வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும்விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமலிங்கம் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசுதரப்பு சாட்சிகளை ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் மீண்டும் குறுக்கு விசாரணை செய்யலாம் என உத்தரவிட்டார்.
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து மீன்டும் அ.தி.மு.க. ஆட்சிபொறுப்பேற்றிருக்கும் சூழ்நிலையில் அரசு தரப்பு சாட்சிகளை மீண்டும் குறுக்கு விசாரணை செய்யஅனுமதிக்கப்பட்டிருப்பது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.