திருமாவளவன் விடுதலை
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான முடக்கத்தான் பாண்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன் கொலைசெய்யப்பட்டதற்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என்று கோரி, கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும பந்த் நடத்துவதற்கு,விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த பந்த்தின்போது, வன்முறை நிகழும் என்று கருதிய போலீஸார், கடந்த வியாழக்கிழமை இரவே முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக, திருமாவளவன் கைது செய்யப்பட்டார். அவருடன் இவ்வமைப்பின் பல மாவட்ட நிர்வாகிகளும் கைதுசெய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை நடந்த பந்த்திற்கும் தமிழகத்தில் அவ்வளவு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு, பல பஸ்களைச் சேதப்படுத்தினர்.
பாண்டிச்சேரியிலும் திங்கள்கிழமை இவ்வமைப்பினர் பந்த் நடத்தினர். இங்கும் பந்த்திற்கு அவ்வளவு ஆதரவு கிடைக்கவில்லை.கடைகள் திறந்திருந்தன. அலுவலகங்கள் இயங்கின. பேருந்துகளும் ஓடின. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து எந்த பஸ்ஸும்பாண்டிச்சேரிக்குச் செல்லவில்லை.
இருந்த போதிலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர், தமிழகத்தில் ஆங்காங்கேவன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
திங்கள்கிழமை விழுப்புரம்-சென்னை சாலையில் பஸ்களை எரித்தும், கல்வீசி எறிந்தும் சேதப்படுத்தினர். விருத்தாசலத்தில்,வன்முறையில் ஈடுபட்ட இந்த அமைப்பினரை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
திருமாவளவன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.அந்த வகையில், இவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.நல்லக்கண்ணு திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார். அதிமுகவின் கூட்டணிக் கட்சி கம்யூனிஸ்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் திங்கள்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டார்.