ஜனாதிபதியுடன் அ.தி.மு.க. குழு இன்று மாலை சந்திப்பு
டெல்லி:
2 தமிழக அமைச்சர்களும், அ.தி.மு.க. எம்.பிக்களும், திங்கள்கிழமை மாலை டெல்லியில் ஜனாதிபதியைச் சந்தித்து, தமிழக நிலையைவிளக்கவுள்ளனர்.
ஜனாதிபதியும் இந்தச் சந்திப்புக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் போலீசாரால் அவரது ஆலிவர் சாலை வீட்டில் கைது செய்யப்பட்டார்.அப்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக ஆளுநரிடம் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நிகழ்த சம்பவங்கள் குறித்து அறிக்கை கேட்டார் பிரதமர் வாஜ்பாய். ஆளுநர்அறிக்கை அனுப்பிய பின் மத்திய அமைச்சரவை கூடி விவாதித்தது. ஆளுநர் அறிக்கை உண்மை நிலையை விளக்குவதாக இல்லை என்றுகூறி, ஆளுநர் பாத்திமா பீவியை திரும்ப அழைத்துக் கொள்ள முடிவெடுத்தது.
பாத்திமா பீவியும் உடனடியாக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். திங்கள்கிழமை அவர் ராஜ்பவனையும் காலிசெய்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் பொன்னையன், தம்பிதுரை ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இவர்கள் அ.தி.மு.க. ராஜ்யசபாஎம்.பிக்களையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, ஜனாதிபதி கே.ஆர். நாராயணனை சந்திக்க உள்ளனர்.
அப்போது அவர்கள் ஜனாதிபதியிடம் தமிழக நிலை குறித்து விளக்க உள்ளனர். ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து பேச ஒப்புதல்அளித்துள்ளார்.அவர்கள் திங்கள்கிழமை மாலை ஜனாதிபதியை சந்தித்து பேசுகின்றனர். அதற்கு முன், அவர்கள் மத்திய சட்ட அமைச்சர்அருண் ஜெட்லியையும் சந்திக்க உள்ளனர்.
இதுகுறித்து, சென்னையில் நிருபர்களிடம் பொன்னையன் கூறும்போது:
கருணாநிதிக்கு சிறையில் வசதிகள் எதுவும் இல்லை என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் குறை கூறியுள்ளார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில்ஜெயலலிதா அடைக்கப்பட்ட அதே சிறையறையில்தான் தற்போது கருணாநிதியும் வைக்கப்பட்டுள்ளார்.
இப்போது அந்த அறை மேம்படுத்தப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவுக்கு மெத்தைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால்,கருணாநிதிக்கு மெத்தை கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இருந்த போது அங்கு மின்விசிறி கிடையாது. இப்போது மின்விசிறியும் போடப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம்கருணாநிதிக்குப் போதாதாம். ஏசி வசதியும் செய்து தரப்பட வேண்டும் என்று பெர்னாண்டஸ் கேட்கிறார் என்றார் பொன்னையன்.
திங்கள் கிழமை மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கவிருக்கும் நிலையில், அ.தி.மு.கவினர் ஜனாதிபதியையும், மத்திய சட்டஅமைச்சர் அருண் ஜெட்லியும் சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தமிழகநிலையை நேரில் வந்து ஆய்வு செய்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான மூவர் குழுவின் அறிக்கை மத்திய அரசைப் பரிந்துரைசெய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.