மேட்டூர் அணையில் நீர் மட்டம் உயர்வு
சென்னை:
மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, அதன் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள கபினி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், கபினிஅணையில் தண்ணீர் நிறைந்து விட்டது. இதையடுத்து, இந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், மேட்டூர் அணைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரத்துவங்கியுள்ளது.
தற்போது, விநாடிக்கு 19,200 கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே போல்,விநாடிக்கு 14,979 கன அடி வீதம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 76.68 அடியாக உள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் விரைவில் மேட்டூருக்கு நீர்?
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால், இந்த அணையின்நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஒரு நாளைக்கு 2 அடி உயரம் என்கிற ரீதியில் இந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் இந்த அணையும் விரைவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இங்கிருந்தும் மேட்டூர் அணைக்கு விரைவில் தண்ணீர் வர ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.