அந்த 200 பேர்...
சென்னை:
வேண்டும் என்றே வன்முறையைத் தூண்டுவதற்காகவே, பேரணியின் கடைசியில் 200 பேர் வந்தனர் என்றுசென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.
டிஜிபி அலுவலகம் வரை அமைதியாக நடந்து வந்த பேரணி, அதற்கப்புறம்தான் வன்முறையாக வெடித்துள்ளது.பேரணியின் கடைசியாக வந்த அந்த 200 பேர்தான் பிரச்சினையைக் கிளப்பியுள்ளனர். வன்முறையைத்தூண்டவேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்தக் கும்பல், கடைசியில் வந்துள்ளது.
வன்முறை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, பேரணியில் வந்தவர்கள் போலீசாரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியும்,கிண்டல் செய்தும் வந்தனர். ஆனாலும், போலீசார் மிகவும் அமைதியாகவே இருந்துள்ளனர்.
இந்த வன்முறை காரணமாக, ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளனஎன்றும் முத்துக்கருப்பன் கூறினார்.
75 பேரிடம் விசாரணை
இந்தப் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, 75 பேர் விசாரணைக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏராளமான ஆயுதங்களை வைத்திருந்ததற்காகவும், வன்முறையைத் தூண்டியதற்காகவும் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுவரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டிஜிபி அலுவலகத்திற்குப் பின்புறம் உள்ள மீனவர் குப்பத்திலிருந்து வந்த சில ரவுடிகளும் இந்த வன்முறையின்போது, திமுக தொண்டர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது, ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
இறந்தவர்களின் பெயர்கள்:
திமுக பேரணியின்போது இறந்தவர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள் விவரம்:
1. சோலை முருகேசன், சென்னை-சைதாப்பேட்டை.
2. செல்வன் ரமேஷ், சீர்காழி.
3. ரெங்கசாமி, கோவை-மதுக்கரை.
4. அந்தோணி, திண்டுக்கல்.
இந்த 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறையில், 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.