சென்னையில் தண்டவாளத்தை விட்டு இறங்கி, மீண்டும் ஏறிய ரயில் பெட்டிகள்
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூருக்குச் சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலின் 2பெட்டிகள், தண்டாவாளத்தை விட்டு இறங்கி பிறகு சிறிது நேரத்தில் தானாகவே மீண்டும் தண்டவாளத்தில் ஏறின.
இந்த ரயில் கடந்த திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திருவள்ளூருக்குப் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்டுச் சென்றசில நிமிடங்களில் ரயிலின் நடுவில் இருந்த 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுக் கீழிறங்கி கற்கள் மீது ஓடியது.
இதனால் ஓரத்தில் இருந்த சிக்னல் விளக்குகள் அனைத்தும் ரயில் பெட்டிகள் உரசியதால் நொறுங்கின.இதையறிந்த பயணிகள் ரயில் கவிழப்போகிறது என்ற அச்சத்தில் அலறினார்கள்.
ஆனால் தண்டவாளத்தைவிட்டுக் கீழிறங்கிய சிறிது நேரத்திலேயே மீண்டும், தானாக தண்டவாளத்தில் அந்த 2பெட்டிகளும் ஏறிக்கொண்டன. பிறகு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரயில் திருவள்ளூர் வரை சென்றது.
சிக்னல் விளக்குகள் உடைந்து விட்டதால் அதைச் சரிசெய்யும் வரை மின்சார ரயில்கள் எதுவும் ஓடாமல் இருந்தன.பிறகு இரவு 10 மணி அளவில் அவை சரிசெய்யப்பட்ட பின்னர், அந்த வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும்ஓடின.