இங்கிலாந்து பிரதமரை புறக்கணித்த சவுதி அரேபியா
ரியாத்:
சவுதி அரேபியாவுக்கு வர வேண்டாம் என இங்கிலாந்துப் பிரதமர் டோனி பிளேரிடம் சவுதி அரேபியா அரசுகூறிவிட்டது.
நேற்று (வியாழக்கிழமை) ஓமன் நாட்டுக்கு வந்த அவர் அங்கிருந்து சவுதி அரேபியா செல்லத் திட்டமிட்டிருந்தார்.ஆனால், அவரை வரவேற்கத் தயாராக இல்லை என சவுதி அரசு கூறிவிட்டது.
இதையடுத்து சவுதி இளவரசர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிளேர்பேசிப் பார்த்தார். ஆனால், சவுதி அரேபியா தனது நிலையில் இருந்து மாற மறுத்துவிட்டது.
இதையடுத்து பிளேர் தனது சவுதி பயணத்தை வாபஸ் பெற்றுவிட்டு நேராக எகிப்து புறப்பட்டுச் சென்றார்.
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை சவுதி அரேபியா எதிர்த்து வருகிறது. இந் நாட்டில் 36,000 அமெரிக்கத்துருப்புகளும் விமானங்களும் முகாமிட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் இராக் தாக்குதலையடுத்து இங்குவந்திறங்கிய அமெரிக்கப் படைகள் தொடர்ந்து அங்கு தான் முகாமிட்டுள்ளன.
இதை பின் லேடன் கடுமையாக எதிர்த்து வருகிறார். இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா இருக்கும் சவுதிஅரேபியாவுக்குள் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதை பின் லேடன் எதிர்த்து வருகிறார். பின் லேடனும்இதே நாட்டைச் சேர்ந்தவர் தான்.
அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மன்னர் குடும்பத்தை பின் லேடன் எதிர்த்ததையடுத்துத் தான்அவரது குடியுரிமையை சவுதி அரேபியா பறித்தது. இதையடுத்து மன்னரையும் எதிர்த்துப் போராடப் போவதாகபின் லேடன் அறிவித்த்தார்.
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கத் தாக்குதலால் இப்போது அரேபியாவில் பின் லேடனுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், இங்கிலாந்து அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது பொது மக்கள் மத்தியில் அரசுக்கு சங்கடத்தைஏற்படுத்தும் என்பதால் டோனி பிளேரின் வருகையை சவுதி மன்னர் நிராகரித்ததாகத் தெரிகிறது.