கருணாநிதி மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சென்னை:
டான்சி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து தன்னுடைய "முரசொலி"பத்திரிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி கட்டுரை எழுதியதால் அவர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்புவழக்கைத் தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழக அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்தத் தீர்ப்பு வெளியானவுடன், "நீதிபதியை மதிப்பதற்கு மேலாக நான் நீதியை மதிக்கிறேன்" என்றும் கருணாநிதிபேட்டி அளித்தார். இந்தப் பேட்டி நீதித்துறையுடன் நேரடியாக மோதுவது போல் உள்ளது.
"உச்ச நீதிமன்றம் சென்றால் நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? என்ற நிருபர்களின் கேள்விக்கு, "எந்தநீதிமன்றத்தில் நீதிகிடைக்கும் என்று சிலரால் மட்டுமே பதில் சொல்ல முடியும். ஆனால் நான் சொல்ல முடியாது"என்று பதிலளித்தார் கருணாநிதி.
"டான்சி தீர்ப்பில் உடன்பாடு உண்டா?" என்று நிருபர்கள் கேட்டதற்கு, "உடன்பாடு என்றால் நானும் நீதிபதியும்சேர்ந்து உடன்பாடு செய்து கொண்டு தீர்ப்பளித்தாக ஆகிவிடும். எனவே அந்த வார்த்தையைத் தவிர்ப்பது நல்லது"என்று கருணாநிதி பதிலளித்தார்.
மேலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பற்றியும், நீதித்துறை பற்றியும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் "முரசொலி"யில்கருணாநிதி கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பணத்தைக் கொடுத்து நீதியை வாங்க முடியும் என்றும் முன்கூட்டியே உடன்பாடு ஏற்பட்டு நீதி வழங்க முடியும்என்றும் அவர் தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டான்சி வழக்கின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் கார்ட்டூன்களும் "முரசொலி"யில் வெளியிடப்பட்டுவருகின்றன.
"கடவுள் கருணையால் விடுதலையானேன்" என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளதைக் கிண்டலடித்து, "காசேதான்கடவுளப்பா" என்று அப்பத்திரிக்கையில் கார்ட்டூன் படம் வரையப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீதிபதியையும் நீதிமன்றத்தையும் கருணாநிதி அவமானப்படுத்தியுள்ளார்.
கருணாநிதியின் எழுத்துக்காகவே பெரும்பாலான மக்கள் "முரசொலி"யை வாங்கிப் படிக்கிறார்கள். இதனால் அந்தமக்கள் மத்தியில் நீதித்துறையைப் பற்றிய தவறான கருத்துக்கள் பரவியுள்ளன.
எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் 15வது பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ஞானப்பிரகாசம்ஆகியோர் அனுமதி அளித்தனர்.
பொங்கல் விடுமுறைக்குப் பின் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
முன்னாள் முதல்வர் ஒருவர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது இதுவே முதல் முறைஎன்பது குறிப்பிடத்தக்கது.