ஆண்டிப்பட்டியில் புதிய தமிழகமும் போட்டி
கோயம்புத்தூர்:
சட்டசபை இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து புதிய தமிழகம் கட்சிவேட்பாளர் போட்டியிடுவார் என்று கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் கோவையில் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
வரும் இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் புதிய தமிழகம் போட்டியிட முடிவு செய்துள்ளது.ஆண்டிப்பட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவும், வாணியம்பாடியில் கணசமாக வோட்டுகள் பெறவும்,சைதாப்பேட்டையில் ஓரளவு பெறலாம் என்றும் கணித்துள்ளோம்.
இப்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் புதிய தமிழகம்வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதால், நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையை தளர்த்தவேண்டும்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளர் நிறுத்த ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. இவர்களை ஒன்றாக இணைக்க கருணாநிதி தவறி விட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுக்கவே ஆண்டிப்பட்டியில் புதிய தமிழகம்போட்டியிடுகிறது. இதற்காக ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுகிறோம் என்று அர்த்தமல்ல.
ஜெயலலிதா போட்டியிட்டாலும், இல்லாவிட்டாலும் புதிய தமிழகம் இத்தொகுதியில் போட்டியிடும் என்றுகிருஷ்ணசாமி கூறினார்.