மற்றொரு டான்சி வழக்கில் அனைவரும் விடுதலை
சென்னை:
டான்சி நில பேரம் தொடர்பான ஆர்.ஆர். இன்டஸ்ட்ரீஸ் வழக்கில் டான்சி நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர்டி.ஆர். சீனிவாசன் உள்பட அனைவரையும் விடுவித்து இன்று (புதன்கிழமை) சென்னை மூன்றாவது தனி நீதிமன்றம்தீர்ப்பளித்தது
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை வழிகாட்டி மதிப்பீட்டை விடக்குறைவாக வாங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக மூன்று வழக்குகள்தொடரப்பட்டன.
இதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான வழக்குகள் மீது தீர்ப்பளிக்கப்பட்டு விட்டன. கடந்த டிசம்பர் 4ம்தேதி சென்னை உயர் நீதிமன்றமும் இவர்களை விடுதலை செய்துவிட்டது.
இது தவிர நிலுவையில் இருந்த ஆர்.ஆர். இன்டஸ்ட்ரீஸ் வழக்கு விசாரணை தனி நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தது.
இந்த வழக்கில் டான்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.ஆர். சீனிவாசன் ஐ.ஏ.எஸ்.,முன்னாள் முதல்வரின் முன்னாள் இணைச் செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன், ஓய்வு பெற்ற துணை கலெக்டர்ஜமீல்பாஷா மற்றும் ஆர்.ஆர். இன்டஸ்ட்ரீஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ரவி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
டான்சி நிலத்தை வழிகாட்டி மதிப்பீட்டை விடக் குறைவாக வாங்கியதின் மூலம், அரசுக்கு சுமார் ரூ.1 கோடிஅளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்
இவ்வழக்கு தொடர்பாக கடந்த 97ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. கடந்த 99ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவ்வழக்குதொடர்பாக 21 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபதி பி. அன்பழகன் இன்று தன்னுடைய தீர்ப்பை அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை அரசு தரப்பு சரிவர நிரூபிக்காததால், இவர்கள் அனைவரையும்விடுவிப்பதாக நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளார்.