குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய தமுமுக வலியுறுத்தல்
கோயம்புத்தூர்:
குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டு அவர்களுடைய பொருள்களும் சூறையாடப்பட்டதால்,அம்மாநில அரசைக் கலைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக)வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுக்கு தமுமுக எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டு அதன்தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை எரித்தவர்கள் மீது குஜராத் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது.
இச்சம்பவத்தில் 58 பேர் உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டது துரதிருஷ்டவசமானதாகும். இதை நாங்கள்வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆனால் அதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை குஜராத் அரசு தடுப்பதற்குத்தவறி விட்டது.
இதனால் அப்பாவி முஸ்லீகள் கண்மூடித்தனமாக இங்கு கொலை செய்யப்படவும் குஜராத் அரசே காரணமாகிவிட்டது. கலவரத்தின்போது முஸ்லீம்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதை குஜராத் அரசும் போலீசாரும்வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் நின்றனர்.
எனவே குஜராத் அரசை உடனடியாகக் கலைக்க உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு நாங்கள் கடிதம்எழுதியுள்ளோம் என்று ஜவாஹிருல்லா கூறினார்.