நெய்வேலி விவகாரம்: மக்களவையில் ஒன்றுபட்ட தமிழக எம்.பிக்கள்
டெல்லி:
நெய்வேலி அனல்மின் நிறுவனத்தை (என்.எல்.சி.) தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து, மக்களவையில் தமிழகஎம்.பிக்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒன்றுகூடிக் குரல் கொடுத்தனர்.
என்.எல்.சியின் பங்குகள் விற்கப்படுவதையடுத்து, அது விரைவில் தனியார் மயமாக்கப்பட உள்ளது என்றதகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதை எதிர்த்து என்.எல்.சி. ஊழியர்கள் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இன்று கூட ஒருநாள்அடையாள நிறுத்தத்தில் இவ்வூழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பிரச்சனை நாடாளுமன்ற மக்களவையிலும் வெடித்தது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம்என்னவென்றால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ஒற்றுமையுடன் என்.எல்.சி. தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோதான் இந்தப்பிரச்சனையைக் கிளப்பினார்.
கடந்த 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தைத் தனியார் மயமாக்கவேண்டிய அவசியமே இல்லை என்றும், அவ்வாறு செய்தால் அதில் பணியாற்றும் 20,000 ஊழியர்களும்அவர்களைச் சார்ந்துள்ள 10,000 குடும்பத்தினரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் வைகோ கூறினார்.
வைகோவின் இந்த ஆவேசப் பேச்சுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.கட்சி வேறுபாடில்லாமல் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக என்று அனைத்துக் கட்சிகளும் கூடி நின்று என்.எல்.சி.தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்துக் குரல் எழுப்பியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.












Click it and Unblock the Notifications