சென்னையில் அதிகரித்து வரும் டெலிபோன் புரளிகள்
சென்னை:
தொலைபேசியில் மிரட்டல் விடுப்பவர்கள் பிடிபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னைமாநகர போலீஸ் கமிஷனர் விஜயக்குமார் எச்சரித்துள்ளார்.
சென்னையில் சமீப காலமாக தொலைபேசியில் மிரட்டல் விடுப்பது, வெடிகுண்டு புரளியைக் கிளப்புவது அதிகரித்த வருகிறது.
தலைமைச் செயலகத்தில்....
தலைமைச் செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன் புரளி கிளப்பப்பட்டது. தொலைபேசியில்குண்டு புரளியைக் கிளப்பிய நபரை பத்தே நிமிடங்களில் போலீஸார் கோழியை அமுக்குவது மாதிரி வளைத்துப் பிடித்தனர்.
மாறன் விமானத்தில்...
அதுபோல சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் மாறன் கிளம்பவிருந்த விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகசமீபத்தில் தொலைபேசியில் புரளி கிளப்பப்பட்டது.
அப்பல்லோவில்....
இந் நிலையில் சென்னையின் பைவ் ஸ்டார் மருத்துவமனையான அப்பல்லோவில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நேற்றுதொலைபேசி மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பல மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில்இந்தப் புரளியால் சென்னை போலீஸ் படை பதற்றமடைந்தது. வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸார் தீவிர தேடுதலில்ஈடுபட்டனர்.
ஆபரேஷன் தியேட்டர், ஐ.சி.யூ., கேண்டீன், டாக்டர்கள் ஓய்வு அறை என மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளும் மோப்பநாய்களால் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை.
பிடிபட்ட புரளியார்...
அதே நேரத்தில் போன் செய்த நபரைப் பிடிக்கும் முயற்சியில் ஒரு படை இறங்கியது. காலர் ஐ.டி. கருவியின் மூலம் அந்த நபர்பயன்படுத்திய தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரையும் போலீசார் சுற்றி வளைத்துவிட்டனர்.
தொலைபேசியில் வெடிகுண்டு புரளி மற்றும் மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரகமிஷனர் விஜயக்குமார் எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையில், இதுபோன்ற புரளிகளால் பொதுமக்கள் மற்றும் போலீஸாரின் பொன்னான நேரங்கள் வீணாக்கப்படுகின்றன.இனிமேல் தொலைபேசியில் மிரட்டல் விடுபவர்கள் பிடிபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.