எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் ஸ்டாலின்
சென்னை:
அதிமுகவினர் தொல்லை தந்து வருவதால் சென்னை மேயர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்வார் என்று பரவலாகக் கருதப்பட்டு வரும் நிலையில் அவர்தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது முறையாக ஸ்டாலின் சென்னை நகர மேயராக வருவதைத் தடுக்க ஆளும் அதிமுக என்னென்னவோ செய்து பார்த்தது. மேயர் தேர்தலில் கள்ளஅமைச்சர்கள் தலைமையில் ரவுடிகளைக் கொண்டு கள்ள ஓட்டு போடப்பட்டது. இருப்பினும் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவினருக்குஅதிர்ச்சியூட்டினார் ஸ்டாலின்.
மேயர் பதவிக்கு ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டாலும் கூட கவுன்சிலர் தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கள்ள ஓட்டுக்கள்,முறைகேடுகள் மூலம் அதிமுகவினர் தான் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினர். தோற்றுப் போனதாக கூறப்பட்ட கராத்தே தியாகராஜன்மோசடிகள் மூலம் வெற்றி பெற்றார், துணை மேயரும் ஆனார்.
துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட கராத்தே தியாகராஜன், மேயர் ஸ்டாலினுக்கு இடைஞ்சல் தருவதற்காகவே அந்தப் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதற்கேற்றார் போல, ஸ்டாலினுக்கு எதிராக செயல்படுவது மட்டுமே அவரது வேலையாக இருந்து வருகிறது.
மேயரின் கொடியை தனது காரில் பறக்க விட்டது, மேயருக்குரிய அதிகாரங்களை தன் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது, மாநகராட்சி மன்றமரபுகளை மீறுவது என்று ஸ்டாலினைக் குறி வைத்து ஒவ்வொரு செயலும் செய்து வருகிறார் தியாகு.
மேயர் பதவிக்குரிய அதிகாரங்கள், மரபுகள் சீர்குலைவது குறித்து மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் கடிதம் எழுதினார் ஸ்டாலின். இருப்பினும் எந்தப்பலனும் இல்லை. இந் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சட்டசபையில், நீங்கள் எந்தப் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை விரைவிலேயே முடிவு செய்யவேண்டும். ஒருவர் ஒரு பதவியில் தான் இருக்க வேண்டும் என்பதற்கான சட்டம் வருகிறது என்று ஸ்டாலினைப் பார்த்து கூறினார் முதல்வர் ஜெயலலிதா.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் பேச்சைத் தொடர்ந்து சில நாட்களிலேயே ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்ட மசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்டுநிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு தற்போது ஆளுநர் ராம் மோகன் ராவ் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்னும் 2வாரங்களில் மேயர் ஸ்டாலின் எம்.எல்.ஏ. பதவியா, மேயர் பதவியா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக்கியத் தலைவர்கள், சட்ட நிபுணர்களுடன் கடந்த சில நாட்களாகவே ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வந்தார். ராஜினாமாசெய்யலாமா அல்லது சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடரலாமா என்பது குறித்து இந்த ஆலோசனை நடந்தது.
இதையடுத்து முதலில் ஒரு பதவியை ராஜினாமா செய்வது பின்னர் சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடருவது என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்திருப்பதாகத்தெரிகிறது. இங்குதான் அதிமுகவுக்கு அல்வா கொடுக்கவுள்ளார் ஸ்டாலின்.
தாங்கள் தந்து வரும் தொல்லைகளை சந்திக்க முடியாத ஸ்டாலின் தனது மேயர் பதவியைத்தான் ராஜினாமா செய்வார் என்று அதிமுகவினர் எதிர்பார்த்துவருகிறார்கள். ஆனால் அதற்கு மாறாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கு சிலகாரணங்களையும் ஸ்டாலின் வைத்துள்ளார்.
எம்.எல்.ஏ. பதவி என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதியின் பிரதிநிதி என்ற அளவோடு முடிந்து விடுகிறது. ஆனால் மேயர் பதவி என்பது சென்னை மாநகரம்முழுமைக்குமான பதவி என்று நினைக்கிறார் ஸ்டாலின்.
மேயர் பதவியையே தான் பெரிதும் மதிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். கருணாநிதியும் இதே கருத்தையே வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேலும்அதிமுகவினருக்கு பயந்து மேயர் பதவியைவிட்டு ஓடிப் போனவர் என்று யாரும் சொல்லக் கூடாது. பிரச்சனைகளை சந்திப்பது தான் உனக்கு அழகு என்றுஸ்டாலினிடம் கருணாநிதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.
மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டால், அதன் பிறகு சென்னை மக்களுடனான தொடர்பு முற்றிலும் அறுந்து விடும் என்று ஸ்டாலின்நினைக்கிறார்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மேயர் பதவியை மட்டும் ஸ்டாலின் வைத்துக் கொண்டால் அவர் மீது வழக்குகள் போட்டு செயல்படவிடாமல் முடக்குவது என்று அதிமுக தரப்பில் திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.
இது தெரிந்திருந்தாலும் கூட விரைவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள் அறிவாலயத்தில்.