லாரிகள், 100 டிவிக்கள் திருடிய கும்பல் கைது
சென்னை:
சென்னை-பெங்களூர் சாலையில் டிரைவர்களை மிரட்டி லாரிகளைக் கடத்திச் சென்று விற்று சாப்பிட்டு வந்த கும்பலை போலீஸார்கூண்டோடு கைது செய்தனர்.
10 பேர் கொண்ட இக்கும்பல் 100 டிவிக்கள் வரை திருடியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
சென்னை-பெங்களூர் சாலையில் அடிக்கடி லாரிகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தக்கொள்ளையர்களைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இந்தப் படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் காஞ்சிபுரம் அருகே காடு ஒன்றில் பதுங்கியிருந்த ஒரு கும்பல் பிடிபட்டது.
இந்தக் கும்பலை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பெங்களூர் சாலையில் லாரிகளைக் கடத்தித் திருடிவந்தது இக்கும்பலைச் சேர்ந்தவர்கள்தான்.
டாடா சியாரா கார் மூலம் இவர்கள் லாரிகளை மடக்கி நிறுத்துவர். பின்னர் கத்தி முனையில் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை தாக்கிவிட்டு லாரியை கடத்திச் சென்று விடுவார்கள். பின்னர் போலி ஆர்.சி. புக் தயாரித்து, நம்பர் பிளேட்டை மாற்றி அதை விற்றுவிடுவர்.
இக்கும்பலிடமிருந்து 2 லாரிகள், ஒரு டாடா சியாரா கார், 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. இதுதவிர இக்கும்பல் திருடிய41 கலர் டிவிக்களும் மீட்கப்பட்டன. வீடுகளிலிருந்தும், கடைகளில் இருந்தும் இந்த டிவிகளை இவர்கள் திருடியுள்ளனர்.
மொத்தம் 100 டிவி வரை இவர்கள் திருடியுள்ளதாகத் தெரிகிறது.