"நக்கீரன்" நிருபர் ஜாமீனில் விடுதலை
பவானி:
நக்கீரன் பத்திரிக்கையின் நிருபரான சிவசுப்பிரமணியத்துக்கு கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் கிடைத்த போதிலும்கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக அவர் இன்னும் ஜெயிலிலேயே உள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக இருந்து பின்னர் அதிரடிப்படையினரின் உளவாளியாக மாறியபர்கூரைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் கடந்த 1998ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் தான் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள்மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மகாதேவன், சத்தியமூர்த்தி, பாஷாபாய் ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி சிவசுப்பிரமணியமும் இந்தக் கொலை வழக்கில் 11வது குற்றவாளியாகச்சேர்க்கப்பட்டார். இவர் மீதான இந்த வழக்கு பவானி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு 90 நாட்கள் ஆகியும் சிவசுப்பிரமணியம் மீது போலீசாரால் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட முடியாததால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அவருடைய வக்கீல் மோகன் பவானிநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி வசந்த லீலா, சிவசுப்பிரமணியத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
வெள்ளித் திருப்பூர் போலீஸ் நிலையம் தாக்கப்பட்ட வழக்கிலும் சிவசுப்பிரமணியத்துக்கு ஏற்கனவே ஜாமீன்கிடைத்து விட்டது.
ஆனால் அவர் மீது ராஜ்குமார் கடத்தல் வழக்கும் இருப்பதால், சிவசுப்பிரமணியம் தொடர்ந்து கோயம்புத்தூர்சிறையிலேயே இருப்பார்.